Friday, June 06, 2008

என் விருப்பங்கள்


என்னுடைய வலைப்பக்கத்தில் ..(வலை பக்கம் என்று சொல்லலாமா.?) எழுதி 3 மாதங்கள் ஆகிறது. சுஜாதா சார் இறந்த போது அவரைப் பற்றி எழுதியது. அவ்வளவே..
தினமும் பலவாறு யோசிக்கிறேன். பல அற்புதமான கருத்துக்கள் வருகின்றன. ஆனால் சோம்பேறித்தனமோ என்னவோ எழுத்தில் அவற்றை கொண்டுவருவதில் ஒரு தயக்கம் உள்ளது.

நான் கதை எழுதுவதா, கட்டுரை எழுதுவதா அல்லது கவிதை எழுதுவதா என்று பல ஆண்டுகள் (ஆண்டுகள்தான்..தயவு செய்து சிரிக்காதீர்கள்) யோசித்திருக்கிறேன். இந்த பாழாய் போன தயக்கம்தான் தடுக்கிறது. எனக்கு ஒரு உந்துதல் தேவைப் படுகிறது.

நான் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். சீமானின் தமிழ் பற்று எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரின் பேட்டி சமிபத்தில் குமுதம் வலை தொலைக்காட்சியில் வந்தது.

(அட..வலை தொலைக் காட்சி..நல்லாயிருக்கில்ல..நம்ம கண்டுபிடிப்பு!). மிகவும் ரசித்தேன்.

ராதாரவியின் யதார்த்தம் எனக்கு புரிந்தது.ஞானி அவர்களின் கருத்துக்கள் எனக்கு பெருமளவு சம்மதம். பெருமளவு என்று சொல்வதன் காரணம் அவரின் பல எழுத்துக்களை நான் படித்ததில்லை.

இப்படி பல வாறு என் சிந்தனை பரவி இருக்கிறது. ஒரு வேளை ஒருமுகப் படுத்தாதது தான் என் குற்றமோ.? புரியவில்லை. சதா எனக்கு ஒரு மன அலச்சல் இருக்கிறது. எந்த தொழில் செய்தாலும் எனக்கு அதன் மீதான பற்று வெகு விரைவில் காணாமல் போகிறது. எழுத்து, பேச்சு மற்றும் படிப்பை தவிர எனக்கு எல்லாமே வெகு விரைவில் அலுத்துப் போகிறது. என்ன செய்வேன்.?


எனக்குள் இப்பொழுது ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். அது என்ன வென்றால் நான் யார் மற்றும் எனக்கு என்ன வேண்டும் என அறிந்து கொள்வது.கடந்த 15 வருடமாக விட்டு விட்டு நடத்திய இந்த போராட்டம் நான் ஆஸ்திரேலியா வந்த பின் ஒரு தொடர் போராட்டமாக ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் இந்த கட்டுரை..

முதலில் என் ஆசைகள் (தற்போதைய!!)

1. ஒரு தமிழ் மற்றும் ஆங்கில (இருமொழி) வலைத்தளம் தொடங்க வேண்டும். அதில் நிறைய எழுதி ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்தை உண்டாக்க வேண்டும்.

2. இந்தியாவில் ஒரு வியாபாரம் தொடங்க வேண்டும்.

3. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்.

4. சம்பாதித்த பணத்தில் சரிபாதி நல்ல காரியங்களுக்கு செலவிட வேண்டும்.

5. ஒரு நல்ல குறும்படம் எடுக்க வேண்டும்.

6. சிறந்த மாற்று கருத்துக்களை குறும்படங்களின் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

7. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு நல்ல சமுதாயமாற்றத்தை
உண்டாக்க வேண்டும்.

நம் தமிழ் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நினக்கிறேன்.
பிறந்ததிலிருந்து இறப்பு வரை பார்ப்போம்..
1. எல்லா கிராமங்களுக்கும் நல்ல சாலை அமைப்புக்கள் வேண்டும். மலை மீது உள்ள கிராமங்களையும் இந்த சாலை அமைப்புக்கள் இணைக்க வேண்டும்.

2. எல்லா கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் அவசியம் இருத்தல் அல்ல நன்றாக இருக்க வேண்டும்.
3. ஒவ்வொரு சிறிய ஊர்களிலும் (ஒரு 10 கி.மி சுற்றளவுள்ள கிராமங்கள் அணுகும் முறையில்) ஒரு மருத்துவமனை, ஒரு கல்லூரி, ஒரு காவல் மையம், ஒரு வேலை வாயப்பகம், ஒரு பெரிய வணிக வீதி அல்லது வணிக மையம் (கிராமப் பொருள்கள் விற்பனை செய்ய) ஒரு நல்ல விளையாட்டு அரங்கம் (உள் மற்றும் வெளி விளையாட்டு தளம் மற்றும் நீச்சல் குளங்கள்) ஒரு நல்ல நூலகம், ஒரு தொழில் கல்லூரி வளாகம, சில குழந்தைகள் காப்பகங்கள் இருக்க வேண்டும்.

என்ன...பாரதியின் காணி நிலம் வேண்டும் என்பது போல் பட்டியில் நீண்டு கொண்டே போகிறதா? இன்னும் உண்டு இது ஒரு தொடக்கம்தான்.

இவையெல்லாம் இன்று ஒரு சிறிய நகரத்தில் கூட இருக்குமா என்பது சந்தேகமே. காவல் நிலையத்தை தவிர மற்றவையாவுமே பல சிறிய நகரங்களில் இன்று இல்லை. அல்லது ஒழுங்காக செயல்படவில்லை.
மேலும்..
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல பள்ளி (இரு பாலருக்கும்!)

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு.

2000 வீடு அல்லது 5000 மக்களுக்கு ஒரு அரசாங்க இலவச மருத்துவ்ம், இலவச கல்விகூடம் இருத்தல் அவசியம்.

ஏழைகளுக்கு கட்டாயம் அரசு வீடு தரவேண்டும்.

வேலை செய்யும் எல்லோருக்கும் மருத்துவம் இலவசம்.

நல்ல சாலை வசிதி இருப்பதனால் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமமே கிடையாது என்றிருக்க வேண்டும்.

வாரம் தவறாமல் கழிவுகள் அகற்றப்பட வேண்டும்.

நல்ல தரமான மின்சாரம் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும்.

நல்ல குடிநீர் எல்லோருக்கும் அவரவர் வீட்டிலேயே கிடைக்கவேண்டும்.

5 வருடம் ஒரு முறை தவறாமல் தேர்தல் நடந்து இந்த கிராமங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் தங்களின் கிராமங்களுக்காக உழைக்க வேண்டும்.

இரு தடவைக்கு மேல் யாரும் தமிழகத்தின் முதன் மந்திரியாக இருக்கக் கூடாது. 3 தடவைக்கு மேல் யாரும் ஒரு மந்திரி பதவி வகிக்கக்கூடாது உண்டாக்க வேண்டும்

இதை எழுதி 10 மாதங்கள் ஆகிறது ஆனாலும் இன்று பிரசுரிக்கிறேன்.
தாமததிற்கு காரணம்.....சோம்பேறித்தனம் தான்..வெட்கப்படுகிறேன்