Friday, December 23, 2016

கசண்டுகள்

அதி "மேல்தாவி"கள் நிறைந்தது நம் தமிழ்நாடு.

எல்லாவற்றையும் இவர்கள் ஜாதியின் கண்ணாடி கொண்டே  பார்ப்பார்கள்.
அதை தாண்டி இவர்களுக்கு சிந்திக்கவே தெரியாது.
ஜெயா வின் மரணமும், சோ வின் மரணமும் இவர்களுக்கு ஒரு "பார்பனிய ஆளுமைகளின்"வீழ்ச்சியாகவே தெரிகிறது. அதாலொழிய பிற்படுத்தப் பட்டோரின் தலைவரான ஜகஜீவன்ராம் முதல்வராக வர முயன்ற சமயத்தில்  அவருக்காக பெரிதும் உழைத்தவர் சோ என்பதையோ  , தான் மிகவும் மதித்த அத்வானியையே நிராகரித்து பிராமணரல்லாத மோடியை ஆதரித்தவர் சோ என்பதையோ வசதியாக  மறந்து விடுவார்கள்.

அடுத்து ஜெயா...சாதி கடந்து மதம் கடந்து இவர் கட்சியை எடுத்து சென்றார். அவரது ஊழல் வாதியா நேர்மையானவரா என்பதல்ல இங்கு கேள்வி. அவர்
ஜாதியை கடந்து செயல்பட்டாரா இல்லையா என்பதே கேள்வி.
இவரையும் இந்த கூட்டம் ஒரு ஜாதியின் டப்பிக்குள்
அடைக்க முயலுகிறது. இந்த இருவருமே என்றுமே தாங்கள் எந்த ஜாதியில்  பிறந்தோம் என்று சொல்ல வெட்கப்பட்டதில்லை.அப்படி யாரும் வெட்கப்பட தேவையில்லை என்றே நம்பினார்கள்.  பிறப்பு என்றுமே உன் கையில் இல்லை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எந்த குள்ளநரித்தனத்திலாவது ஜெயாவை வீழ்த்தி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலர் முதலில் அவரை நடிகை என்று இழிவு படுத்தினர்.. முடியவில்லை.      பின் வைப்பாட்டி என்று வசை பாடினர். அதற்கும் அசரவில்லை.  கடைசியாக எல்லோரையும் வீழ்த்த அவர்கள் எப்போதும் கை கொள்ளும் அஸ்திரமான ஜாதியை சொல்லி வசை பாட தொடங்கினர். பாப்பாத்தி  என்று கேலி செய்து கூவினர். சட்ட சபையிலேயே வெகுண்ட எழுந்த ஜெயா..."ஆமாம்.  நான் பாப்பாத்திதான். பாப்பாத்திதான். பாப்பாத்திதான்." மூன்று முறை கூவி அதிரடித்தார். மேலும் பாப்பாத்தி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று சொல்லி கேலி செய்தவர்களை வாயடைக்க செய்தார். அதன் பின்னரே அவர்கள் ஜெயாவை அப்படி அழைக்க பயந்தார்கள்.

இப்படி ஜாதிபிரிவின் பின்னே ஒளிந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் யார் என்று சொல்லவும் வேண்டுமோ ???

இன்று அதே முரசொலி கூட்டத்தின் கே.என்.சிவராமன் என்பவர் தனது கருத்துக்கும் தான் வேலை செய்யும் இடத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்லிக் கொண்டே  அதே வஞ்சகத்துடன் இந்த ஜாதிய அரசியலை முன்னெடுக்கிறார்.

ஆனால் ஒன்று நிச்சயம்.
சாமான்ய மக்கள் இவர்களை சற்றும் கண்டு கொல்லாமல் கடந்து செல்கின்றனர்
http://vaettoli.blogspot.co.uk/2016/04/blog-post_39.html

ஜெயலலிதா

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது
அத்தனை நாகரீகமானது அல்ல.  ஆனால்...அதே நபர்
தன தனிப்பட்ட வாழ்க்கையால் ஒரு சமூகத்தை பாதிக்க
நேர்ந்தாலோ அல்லது அவரது தனி வாழ்க்கையை காட்டி
பொதுவில் பரிதாபம் தேட நினைத்தாலோ அவரது தனி வாழ்க்கையும்
பொதுவில் விமர்சிக்கப்பட்ட தீரும்.

ஜெயா வின் வாரிசுகள் என்று அவரது சொத்துக்களுக்கு மட்டுமன்றி
அவர் தலைமை தாங்கிய கட்சிக்கும் இன்று சண்டை தொடங்கி விட்டது.

ஜெயா வின் கடந்தகாலத்தை அவரை சார்ந்தவர்கள் இரு வேறாக
பார்க்கின்றனர்.
1  ஒரு ஜோன் ஆப் ஆர்க் போல போராட்டத்தில் வெற்றி கண்ட மங்கை என்று அவர் அறியப்பட வேண்டும்  என்று ஒருபுறம் கூவுகினறனர்.
2  இன்னொரு புறம் அவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் பிறருக்காகவே வாழ்ந்து, மரணத்திலும் வஞ்சிக்கப்பட்ட  தியாக சுடர். அவர் மீது பரிதாப படுங்கள் என்று ஒரு புறம் கூவுகின்றனர்.

3. அவரது எதிரிகள் அவரை ஒரு பெரும் அரக்கியாக கருணையே இல்லாத பேராசை பிடித்த சாத்தானாக பார்க்கிறார்கள்.

இவை இல்லாமல் பொதுவான   (IMPASSIONED)  பார்வையாளனாக இங்கு
இவரை வெளிக்காட்ட யாரும் துணிவதில்லை. காரணம் அது சார்பில்லாத நிலை. அங்கு யாரும் செல்வதில்லை.

ஜெயா...இவரின் வாழ்க்கையை அவரது கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தாலேயே சில விஷயங்கள் விளங்கு கின்றன.

1 ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் தேவையான  தாய் தந்தையுடன் வாழும் ஸ்திரமான வாழ்க்கை தொடக்கம் இவருக்கு இல்லை. எந்த குழந்தைக்கும் அதன் தந்தைதான் முதல் ஆளுமையுள்ள ஆண் (சூப்பர்மேன்). அப்படி பட்ட தந்தை இளம் வயதிலேயே இறக்கும் போது ஒரு வெற்றிடம் உருவாகிறது. மேலும் பின்னாளில் இறந்த தந்தையும் பெரிய போற்றக்கூடிய ஆளுமையில்லை என்று தெரிய வரும் போது ஏமாற்றம் அதிகரிக்கிறது.  இது முதல் அடி. சுருங்கி போகிறார்.

2 அடுத்து குழந்தையின் புகலிடம் தாய். ஆனால் பொருளாதார நெருக்கடி
காரணமாக தாயும் பிரிகிறார். இது அடுத்த அடி. 
ஆனால் இங்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது.  தாத்தா பாட்டியுடன் வளரும் வாய்ப்பு. செல்லமாக வளர்க்கப்படும் சூழல். அதீத செல்லம் ஆளை கெடுக்கும். அதுதான் நடக்கிறது.
இதுவும் குறைந்த காலமே..சென்னைக்கு மாற்றம். புதிய இடம். புதிய வாழ்க்கை.

3  தாயின் சினிமா வாழ்க்கை இவர் விரும்பாவிட்டாலும் இவரை பாதிக்கிறது. பள்ளியில் இவர் சீண்டப்படுகிறார். (BULLYING ).  இவரது தாயை தரக்குறைவாக பேசி இவர் சீண்டப்படுவது இவருக்கு புதிராகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. அந்த வயதில் தன்னை தனது தாயின் பொருட்டு சீண்டுவது இவருக்கு விளங்கவில்லை. கோபமும் வெறுப்பும் இவரை மேலும் தனிமை படுத்துகின்றன.. நட்புகள் வெகு குறைவானதாகிறது. 

அன்றைய கால கட்டத்தில் சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு சமூகத்தில் தரக்குறைவான மரியாதையே இருந்த காரணத்தினால் சந்தியாவின் தாய் வழி தந்தை வழி பிராமண சொந்தங்கள் நெருங்கி வரவில்லை.  அதை பற்றி சந்தியாவும் பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஆனால் ஜெயாவுக்கு தன் குடும்பம் தனிமைப்படுத்தப்படுகிறது என்று புரிய தொடங்கியது.

அன்றைய கால கட்டத்தில் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பல விஷயங்கள் தன்னை சுற்றி நடப்பது ஒரு பதின்பருவ பெண்ணான ஜெயாவுக்கு ஆண்களின் மீது  வெறுப்பை அளித்ததில் ஆச்சரியமில்லை.
.(இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.).  இவரது சூழ்நிலையின் காரணமாக அவர் அன்று கண்ட பல ஆண்களும் ஒரே விஷயத்தை படப்பிடிப்புக்கு வெளியே தேடுபவர்களாக அமைந்தது ஒரு துரதிஷ்டம்..அதனால் மேலும் சுருங்கி மேலும் பிடிவாதக்காரியாகிறார். இவர் இப்படி ஆக ஆக இவரை மேலும் மேலும் சமாதான படுத்த வேண்டிய கட்டாயம் சந்தியாவிற்கு ஏற்படுகிறது. எனவே இவர் ஆட்டியபடியெல்லாம் ஆட வேண்டிய நிலை.  இது ஒரு தாயின் குற்ற உணர்ச்சியின் விளைவே.  சினிமா எனும் ஒரு மீள முடியாத சூழலில் சிக்கி இருக்க அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் அதே சமயம் மகளையும் காத்து மகிழ்விக்க இவர் இப்படி செய்வதே சரி என்று நினைத்தார்.

தி.நகரில் சிவஞானம் தெருவில் இருக்கும் வீட்டில் இவர் வளர்ந்த போது இவரது கோபமும் பிடிவாதமும் மிகவும் பிரசித்தம். மாடியில் இவர் வளர்ந்த அந்த சிறிய அறையில் இவர் கோபத்தினால் உடைத்த தொலைபேசிகள் (அந்த காலத்தில் கருப்பாக மிகவும் கனமாக இருக்கும் ) நூற்றுக்கணக்கானவை என்று வேலைக்காரர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். (நான் கேட்டது 80 களின் இறுதியில் - 30 வருடங்கள் முன்பு) ஒவொரு முறையும் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி இணைப்பகத்தில் இருந்து ஆட்கள் வந்து புது தொலைபேசியை வைத்து விட்டு 5 ரூபாய் (அன்று பெரிய பணம் அது ) வாங்கி செல்வார்களாம்.

இப்படி ஒரு மூர்க்கத்தனமான கோபம் கொண்டவர் செல்வி.ஜெயலலிதா.
இப்படிப்பட்ட மூர்கத்தனமான பிடிவாதமே பின்னாளில் இவரை கண்டு
பலரையும் நடுங்க வைத்தது.

இப்படி இவரது பிடிவாதத்திற்கு வளைந்து கொடுத்து மற்றவர்களிடம் இருந்து இவரை காப்பாற்றி பொத்தி பொத்தி வளர்த்த சந்தியா இவரது நடிப்பு வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைக்க தொடங்குகிறார்.
இவரது தாயின் தொழில் இவர் விரும்பாமலேயே இவர் மீது வீழ்கிறது. முதலில் இவர் அதை மறுத்தாலும் குடும்பத்தின் பொருளாதார சூழலை சொல்லி மெல்ல இவரது தாயார் இவரை கரைக்கிறார்.  முதலில் இந்த திரைத்துறையில் இருக்கும் முதலைகளை இவர் அறியவில்லை. அறிந்த போது காலம் கடக்கிறது.

இங்கு சில பிம்பங்களை உடைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லது செய்தார். சில சமயம் அவர் கொஞ்சம் அதிகமாகவே தன்னிடம் வந்தவர்களை கட்டியணைத்து கொள்வார்.  மூச்சு முட்டும். வேறு வழியில்லை. அதான் அவரது குணம். அதிலிருந்து நீங்கள் மிரண்டு வெளியேறினால் அவர் கோபித்து கொள்வார். மறைமுகமாக உங்களை தனிமைப் படுத்தி வேறு வழியில்லாமல் அவரிடமே திரும்பி வரும் வகை செய்வார். அன்று அவரால் அது முடிந்தது. இது அன்று அவருடன் இருந்த பல புத்திசாலிகளுக்கு தெரியும். 

இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்.ஜெயலலிதாவின் மீது அக்கறை கொண்டார். ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்புக்கு பிறகு அவர் ஜெயாவை தன நிழலுக்கு கீழ் கொண்டு வர பிரியப்பட்டார்.  இது ஜெயா போன்ற பிடிவாத குணம் கொண்டவருக்கு பிடிக்க வில்லை. எம்.ஜி.ஆர். தனக்கு பிடித்தவர்களை யார் சந்திக்க வேண்டும். யார் சந்திக்க கூடாது என்கிற அளவுக்கு நுணுக்கமாக கட்டுப்படுத்துவார். இது அவரின் ஒரு குணம். அவரை பொறுத்தவரை ஜெயா ஒரு சிறு பெண்.சினிமாவில் இருக்கும் பல முதலைகளிடம்  மாட்டிக் கொள்ளாமல்  தான் பாதுபாக்ப்பதாகவே நம்பினார்.  இது ஜெயாவுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. தன சுதந்திரத்தில் எம்.ஜி.ஆர். தலையிடுவதாகவே ஜெயா கொதித்தார்.

அன்றைய சினிமா கொஞ்ச காலத்திற்கு இரண்டு குழுக்களாகவே பெரும்பாலும் இயங்கியது. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி....இதில் சிக்காமல் தப்பிய பெருந்தலைகள் வெகு குறைவு. அப்படி தப்பியவர்கள் இந்த இருவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கொடி கட்டியவர்களாக இருந்திருப்பார்கள்.
இந்த இருவருக்கும் தனி தனி தயாரிப்பாளர்கள். தனி தனி நடிகைள் மற்றும் துணை நடிகர் கூட்டம். எம்.ஜி.ஆர். படத்தில் நடித்த நாயகி சிவாஜி படத்தில் நடித்தால் திரும்ப எம்.ஜி.ஆர். படித்ததில் நடிப்பது கடினம். அவர்கள் வேறு மொழியில் யாருடனும் நடிக்கலாம் ஆனால் அது தமிழில் கூடாது.  இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும். இதில் தப்பியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதமினி, பானுமதி போன்றவர்களே...

இந்த சூழலில் எம்.ஜி.ஆரின் நெருக்கம் தன மகளை பாதுகாத்து தான் அடைய முடியாத வெள்ளித்திரை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று சந்தியா நம்பினார். அதன் விளைவு, ஜெயா தான் சிறைப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தார். ஆண்கள் என்றாலே பெண்களை கட்டுக்குள் வைத்து கொண்டு பயன்படுத்துபவர்கள் என்கிற எண்ணம் ஜெயாவுக்கு வலுக்கிறது.

இதை மீற ஜெயா தொடர்ந்து பல விதங்களில் கடைசிவரை  பல முறை முயன்றார். சில வருடங்களுக்கு பிறகு  ஒரு நாள்  இவரை போலவே இளம் வயதினாரான ஜெய்சங்கர் இவர் வீட்டுக்கு வந்த பேசிக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர்.ரின் ஆட்கள் வந்து ஜெயா எத்தனை முறை கத்தினாலும் பொருட்படுத்தாமல் ஜெயஷங்கரை அவமதித்து மிரட்டி ஜெயாவின் வீட்டில் இருந்து வெளியேற்றினர் என்று சொல்வார்கள்.

சரி..கதைக்கு வருவோம்...

எம்.ஜி.ஆர். ஜெயாவின் வாழ்வில் நுழைந்த சில வருடங்களில் ஜெயாவை பெரிதும் காத்த பொத்தி பொத்தி வளர்த்த அவரது தாயார் இறந்தார். அப்போது ஜெயாவுக்கு வயது 22 . வாழ்வில் வனப்பும் வளமும் சேர்ந்து கொண்டு தன்னம்பிக்கை துளிர்க்க தொடங்கிய காலம். வெளியில் எப்படி காட்டிக் கொண்டாலும் மனதளவில் இவர் தனது நங்கூரமாக நினைத்த தாய் திடீரென்று மறைந்தது இவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உண்மையை சொன்னால் இவர் இந்த பிரிவின் தாக்கத்தில் இருந்து தன் வாழ்நாள் முழுவதும் மீளவே இல்லை. இந்த அன்பிற்கு இணையான அன்பினை தரும் ஆட்களை தேடிக் கொண்டே இருந்தார். அப்படி ஒரு நிபந்தனையில்லா அன்பு சசிகலா தருவதாக நம்பியதால்தான் அவர் கடைசிவரை சசிகலாவை மட்டும் மீண்டும் மீண்டும் மன்னித்தார். விட்டு கொடுக்கவில்லை.

இவர் தனக்கு நண்பர்கள் என்று யாரையும் முழுதாக நம்பிட வாய்ப்பில்லை. தன ஆசை, கோபம் பிடிவாதங்களுக்கு வளைந்து நெளிந்து போகும் ஒரே தொடர்பு அறுந்த போது இவரூக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து போனதாய் அவர் தெரிவிக்கிறார். அதே சமயம் குடும்பத்தில் தாய் இறந்த சமயம் சொத்து பிரச்சனையும் எழுகிறது. 1965 க்கு பிறகு குடும்ப கடன்களை ஜெயாவின் வருமானமே அடைத்தது. அப்படி இருக்க தி.நகர் வீடு யாருக்கு சொந்தம் என்பது போன்ற சொத்து பிரச்சனைகள் தொடங்கியது. இதுவும் ஜெயாவுக்கு அதிர்ச்சியே.  அதே சமயம் ஜெயாவின் பேரில் போயஸ் தோட்டத்தில்
சந்தியா நிலம் வாங்கி வீடு கட்டவும் திட்டமிட்டிருந்தார். சொத்து தகராறில் அண்னன் உட்பட மற்றவர்களால் தான் வஞ்சிக்கப்பட்டதாகவே  ஜெயா நம்ப தொடன்கிறார். ஆண்களின் மீதான நம்பிக்கை மேலும் தகர்ந்தது.

இந்த நிலையில் சந்தியாவின் மரணத்திற்கு வந்த  எம்.ஜி.ஆர். அந்த குடும்பத்தின் குழப்பங்களை தீர்க்க தலைப்பட்டார். அன்று அவருக்கு இருந்த செல்வாக்கால் நடுவில் வேறு யாரும் புக முயற்சிக்கவில்லை.  சொத்து பிரிப்பு பிரச்சனையின்றி தீர்த்த எம்.ஜி.ஆர். ஜெயாவை முழுவதும் தன நிழலுக்கு கொண்டுவந்து விட்டார். 
இந்த நிலை ஜெயாவுக்கு பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லை.
கையறு நிலையில் விரும்பாத சில விஷயங்களை கட்டாயத்தின் பேரில்
செய்ய வேண்டிய சூழல் கொடுமையான மன அழுத்தத்தை கொடுக்கும்.
திட மனதில்லாதவர்களுக்கு பைத்தியம் கூட பிடிக்கும். ஆனால் ஜெயா பிடிவாதகாரி. போராட்ட குணம் மிக்கவர். கோழையில்லை.  

எம்.ஜி.ஆர். தன்னை இழுத்த இழுப்புக்கெல்லாம் வர சொல்வதை
வெறுத்தார். அனால் எம்.ஜி.ஆர். அவருக்கு தெரிந்த அளவில் தான் நல்லது செய்வதாகவே நினைத்தார். என்ன செய்தாலும் இந்த பெண் இப்படி முரண்டு பிடிக்கிறதே என்றே நினைத்திருப்பார்.  எம்.ஜி.ஆரின் அனுபவத்தில் இது அவருக்கு ஆச்சரியமாகவும் இருந்திருக்கும். ஏன் என்றால் அவருக்கு முன் யாரும் பிடிவாதம் பிடித்ததில்லை. அவர் அப்படி ஒரு ஆளுமை.  ஆனாலும் அவருக்கு ஜெயாவின் இந்த  பிடிவாதமே பிடித்து போனது. அதனாலேயே எத்தனை முரண்டினாலும் அவர் ஜெயாவை மீண்டும் மீண்டும் மன்னித்து தன்னிடமே வைத்துக் கொண்டார்.  இது ஒரு LOVE HATE RELATIONSHIP  

இப்படி பட்ட உறவில் இருந்ததனாலோ என்னவோ  ஜெயாவுக்கு ஆண்கள் மீது வெறுப்பு இன்னமும் வளர்ந்தது. 

சிறிது காலம் பிறகு இவரின் சினிமா வாய்ப்புகள் சுருங்கும் போது இவருக்கு தெலுங்கு நடிகர் சோபன் பாபு வின் அந்தரங்க நட்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆரின். கட்டுக்குள் இருந்து தான் விலகி தான் சுதந்திரமாக செயல் படுவதாக நினைத்து சொபன்பாபுவுடன் இணைகிறார். சோபன்பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை குட்டிகள் இருந்தாலும் சுமார் ஏழு வருடங்கள் இவர் சோபன் பாபுவுடன்  ஹைதராபாத்தில் குடும்பமும் நடத்தினார்.

முழுதாக ஒரு ஆணை நம்பி வந்து தாம் சந்தோஷமாக விரும்பியபடி வாழ்வதாக மகிழ்ந்தார். அதை ஒரு நேர்முகத்திலும் தெரிவித்தார்.  தனது வாழ்க்கை தேர் ஒரு நிலைக்கு வந்து விட்டதாகவே நினைத்தார்.

விதி யாரை விட்டது ???   

சோபன்பாபுவின் முதல்தார வாரிசுகள் வளர்ந்து இந்த இரண்டாம்தார பிரச்சனைகளை கேள்வி கேட்க தொடங்கினர்.  குடும்ப சண்டைகள்
தொடங்கின.  மீண்டும் வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மை உடைவதை
ஜெயாவால் பொறுக்க முடியவில்லை. உடைந்து போனார்.
தனக்காக சோபன்பாபு துணை நிற்பார் என்று நம்பியது வீணாய் போனது.

இரண்டாம்தார பிரச்சனையில் சோபன் பாபு தன முதல்தாரம் பக்கமே
நின்றுவிட்டார்.  இது மிகப்பெரிய அதிர்ச்சி. அடிப்படை சரியில்லாமல்
தொடங்கும் எந்த உறவும் இப்படித்தான் முடியும் என்று புரியும் போது
கலக்கமே உண்டாகும்.

தன் தாய் இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டு அனுபவித்த வேதனைகளை தான் தாண்ட முயற்சித்து முடியாமல் அதை நிலையில் தானும் வீழ்ந்து பட்டது ஜெயாவால் ஜீரணிக்க முடியவில்லை.  மீண்டும் ஒரு ஆணால் தான் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்.

திரும்ப சென்னை வருகிறார். ஒரு முறை இவர் தற்கொலைக்கு முயன்றார் என்கிற வதந்தி உண்டு.  அப்போது மீண்டும் இவர் வாழ்வில் எம்.ஜி.ஆர். இரண்டாம் முறையாக நுழைகிறார்.

இந்த சமயம் எம்.ஜி.ஆர். அரசியலில் நுழைந்து தனி கட்சி கண்ட நேரம்.
அவருடைய செயல்பாடுகளும் அதிகார மற்றும் தொடர்பு எல்லைகளும் விரிவடைந்த நேரம். இந்த சமயத்தில் ஜெயாவுக்கு உதவ முன் வந்த எம்.ஜி.ஆர். அவருக்கு ஆறுதல் கூறி மாற்று வழி காட்ட முனைகிறார்.
தனது தொடர்புகளின் மூலம் பத்திரிகைகளில் இவர் எழுத எம்.ஜி.ஆர். ஏற்பாடுகள் செய்கிறார். அதில் ஒன்று துக்ளக். இன்னொன்று குமுதம்.

இப்போதுதான் சந்திரலேகா உபயத்தில் சசிகலா வந்து சேருகிறார்.
கூடவே நடராஜனும் இணைகிறார். இந்த புதிய தொடக்கத்தில் தனக்கு கிடைக்கும் வரவேற்பு ஜெயாவை சிந்திக்க வைத்து தனி நடை போட வைக்கிறது.  எந்த ஆண்கள் தன்னை வஞ்சித்தனரோ அவர்களை தன்னால் வெல்ல முடியும் என்று நம்ப தொடங்குகிறார். அந்த ஆண்களையே இவர் உபயோகிக்க முடிவு செய்கிறார். முதல் பலி...எம்.ஜி.ஆர்.

எந்த நடராஜனை கொண்டு தன்னை கண்காணிக்க எம்.ஜி.ஆர். சொன்னாரோ அதே நடராஜன் சசிகலா துணை கொண்டு இவர் காய்களை நகர்த்த தொடங்குகிறார். 

எம்.ஜி.ஆர்ஐ திறமையாக கையாண்டு அவரை நெருங்கி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்கிறார். கட்சியில் பதவி பெறுகிறார்.
கிடைத்த இடத்தை தக்க வைக்க உழைத்து முன்னேறுகிறார்.
தன்னை சுற்றி ஒரு கூட்டம் அவசியம் என்று உணர்ந்து அரசியலில் நிலைக்க எல்லா வழிகளையும் தெரிவு செய்கிறார்.  எம்.ஜி.ஆறே  விலகினாலும் விடாமல் இவர் தொடர்ந்து தொடர்புகளை தக்க வைத்துக் கொள்கிறார். அரசியல் ஆட்டம் தொடங்குகிறது.

இந்த சமயத்தில்தான் திடிரென்று எம்.ஜி.ஆர். மறைகிறார்.

மீண்டும் ஒரு தடுமாற்றம்.
தன்னை சுற்றி இருக்கும் ஆண்கள் கூட்டம் மீண்டும் ஒரு முறை  தன்னை வகைப்படுத்தவும் பயன்படுத்தவும் முயல்வதை உணர்ந்து கொள்கிறார்.

ஆனால் இந்த முறை இவரை சுற்றி இவர் சுயமாக சேர்த்த ஆண் பெண்
கூட்டம் நிற்கிறது. இது இவருக்கு புது தெம்பை அளிக்கிறது. இப்போது இவர் ஆட்களை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராக ஆனதால் திறம்பட தன இமேஜை கட்டமைக்கிறார். யாரையும் தம்மை நெருங்க விடவில்லை. தனியாக துளிர்த்து பின்னாளில் தன்னை மீறும் என்று இவர் கணிக்கும் எந்த ஆட்களும் தனது அருகில் இல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார். 

முதல் முறை சட்ட மன்றத்தில் தாக்கப்படும் போது உண்மையில் இவரும் கருணாநிதியை சுட்டிக்காட்டி "அடிடா அவனை " என்று வன்முறையை தூண்டியவர்தான். ஆனாலும் பிரச்சனை வெடித்த பிறகு தான் மானபங்க படுத்தப்பட்டதாக தைரியமாக கூறி பெண்களின் இரக்கத்தை பெற்றார்.
நன்றி.தி.மு.க..மற்றும் அந்த கட்சியின் அவசர குடுக்கைகள்.

கருணாநிதிக்கு இந்த பெண்ணின் போராட்ட குணம் வியப்பாக இருக்கிறது.
பெண் அதுவும் பார்ப்பன பெண் மிக எளிதாக விழ்த்தி தாண்டி போகலாம் என்று நினைத்த கருணாநிதிக்கு இப்படி நேரடியாக வன்முறைக்கு பயப்படாத ஜெயலலிதா ஒரு அதிர்ச்சியே. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கை எடைபோட்டதில் செய்த அதே தவறை திரும்ப செய்து கையை சுட்டுக் கொண்டார்.

உள்ளூர பயம் நெக்கி தள்ளி மனம் சோர்ந்த நேரத்தில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக கடிதம் கூட எழுதினார்  ஆனால். அதை கொடுக்க வில்லை. பின் மனச் சோர்விலிருந்து மீண்டு வந்து கடிதத்தை அழிக்க சொன்னார்.
.
இந்த குழப்பமான சூழலில் மீண்டும் கருணாநிதி இவரை சீண்டும்
விதத்தில் இந்த கடித்தை  கைப்பற்றி வெளியிட்டார். இது ஜெயாவுக்கு
பெரிய அதிர்ச்சி.

இந்த கடிதம் நடராஜன் வசம் இருந்தது. இது போலீசால் கைப்பற்றப்பட்டது என்ற கதையை அவர் நம்பவில்லை.  நடராஜன் தான் தனக்கு துரோகம் செய்து கருணாநிதியிடம் விலை போய் விட்டார் என்று நம்பினார்.

மீண்டும் ஒரு ஆண் தனக்கு துரோகம் செய்வதாக புரிந்து கொண்டு வெகுண்டார். தான் தோற்று போவதை ஒருநாளும் விரும்பாத ஜெயா மீண்டு வந்து பழி வாங்கினார். மற்றது அரசியல் வரலாறு.

இத்தகைய பின்புலத்தை மனதில் கொண்டே ஜெயலலிதா என்கிற
பெண்ணை பார்க்க வேண்டும்.

தொடக்கத்தில் தான் கேட்டதையெல்லாம் கிடைக்க செய்யும் அம்மாவின்
செல்லத்தில் தொடங்கிய முரட்டு பிடிவாதம் பின்னாளில் பூதாகாரமாக
வளர்ந்து பலரையும் பாதித்தது.

இது போன்ற மனநிலை எல்லோருக்கும் சிறுவயதில் தோன்றும். ஆனால் வயது ஏறயேற சூழ்நிலைகளும் மற்றவர்களும் நிதர்சனத்தை புரிய வைத்து நம்மை தரைக்கு கொண்டு வரும்.

ஆனால் சிலருக்கு அப்படி இறங்க மனம் வராது. தான் தோற்கவே முடியாத தனிப்பிறவி என்றே நினைத்துக் கொள்வார்கள். அப்படி தோற்றால் இந்த உலகமே  தங்களுக்கு எதிராக சதி செய்வதாக நம்புவார்கள். இவர்கள் பலமில்லாத சூழ்நிலையில் தோற்றால் இவர்களுக்கு தற்கொலை செய்யும் மனப்பான்மை கூடும். 
ஹிட்லர் ஒரு உதாரணம்.

ஆனால் ஜெயா போன்ற போராட்ட குணம் கொண்டவர்கள் தங்களின்   சூழ்நிலையை தாங்களே உருவாக்கி தங்கள் காரியங்களை சாதித்து கொள்வார்கள். அதற்கான புத்திசாலித்தனம் இவர்களிடம் இருக்கும்.

பெரும்பாலான சர்வாதிகாரிகள் குறைந்த பட்ச மனநிலை இது போன்ற முரட்டு பிடிவாதம் ஆகும். இப்படி பட்டவர்கள் தங்களை சுற்றி துதிபாடிகளையே வைத்திருப்பார்கள். அப்படிபட்டவர்களையே வளர்த்தெடுப்பார்கள்.

ஜெயா இந்த மாதிரி மனநிலை கொண்டவர்தான். முதலில் சுய பச்சாதாபத்தில் தொடங்கினாலும் தான் நினைத்தால் ஆடம் பிடித்தால் காரியங்கள் நடக்கும் என்பதை தன சித்தியின் மூலம் அம்மாவின் மூலம் இவர் நம்ப தொடங்கியதுதான் தொடக்கம். இதை எம்.ஜி.ஆரும் வளர்த்தெடுத்தார். இவரது அம்மா இவரை .."உனக்கென்னடி ..நீ மகாராணி " என்று செல்லமாக சொல்லியதை நிஜமாகவே நம்பினார் என்றே தோன்றுகிறது. காரணம்...பின்னாளில் இவர் செய்த செயல்கள்.

இந்த நினைவின் காரணமாகவே இவர் யாருக்கும் கட்டுப்பட மறுத்தார்.
அது எம்.ஜி.ஆரோ, கருணாவோ, யாராக இருந்தாலும் சரி..இவர் தான் நினைத்ததை செய்ய முற்பட்டார். தான் செய்வது சரியே ...அதன் விளைவுகளுக்காக யாரிடமும் வருத்தமோ மன்னிப்போ கேட்க முடியாது என்று முரட்டுத்தனமாக நம்பினார்.

ஒரு அரசி யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை என்றே நினைத்தார்.
செத்தாலும் சாவேனே ஒழிய மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்கிற
அளவுக்கு பிடிவாதம் இவரிடம் இருந்தது.

முதலில்  ஆட்சிக்கு வந்த போது உலகம் இவரது காலடியில் என்கிற மிதப்பு இவரிடம் இருந்தது. தன்னை ஒரு ராணியாகவே நினைத்தார்.
ஒரு பொதுத் தேர்தலின் வெற்றி ஒரு மாநிலத்தின் தலைமை பதவி.
தான் வாழ்க்கையில் வெற்றி கண்டதாக  உலகையே வென்றதாக
பூரித்தார். 

விளைவு  ...

ஒரு ராணி போல வாழ முற்பட்டார். அவர் வெளியே வந்தால் பண்டிகை.
 திரும்பினால் திருவிழா.  பேசினால் பாராட்டு விழா.
தன்னை ஒருவரும் கேள்வியே கேட்க முடியாது என்றே நம்பினார்.

அதுவரை உலகில் யாருமே நடத்திராத அளவுக்கு மிகப் பெரிய திருமணத்தை நடத்தி காட்டினார். அதில் யாருமே செய்யாத வண்ணம் நகைக்கடையாக தன்னையும் தன தோழியையும் அலங்கரித்து கொண்டு வீதி உலா வந்தார்.
அடிமைகள் கூட்டம் சேர சேர கொண்டாட்டம் அதிகம் ஆகியது.
இவர் உட்கார என்றால் இவர்கள் படுக்க தயாரான அடிமைகள் இருக்கும் போது இவர்க்கு என்ன கவலை !!

இவர் முட்டாள் இல்லை.
தன்னை வணங்குபவர்கள் தங்கள் சுயநலத்திற்காகத்தான் தன் காலடியில் வீழ்கிறார்கள் என்று இவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அப்படி காலில் விழாமல் தலை தூக்கி பார்ப்பவர்களை அருகிலேயே சேர்ப்பதில்லை.

இந்த ராணி போன்ற மனநிலையில் நல்லது நடக்காமலும் இல்லை.
தன்னிடம் வந்து காலில் விழுபவர்களை தான் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்ப வைப்பார். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து உச்சத்தில் கொண்டு போய் மற்றவர்களையும்  தன் காலில் விழ வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

அவர் அறிவித்த திட்டங்கள் பலவும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான திட்டங்களே.இது அவரின் புத்திசாலிதனத்தையே காட்டுகிறது. பெண் வாக்காளர்கள் சாதரணமாக அரசியலில் ஒருவரை நம்ப மாட்டார்கள். நம்பி விட்டால் கடைசிவரை மாற மாட்டார்கள். இது எம்.ஜி.ஆர் க்கும் பொருந்தும். மேலும் ஜெயா ஒரு பெண். எனவே பெண்கள் தங்களின் பிரதிநிதியாக இவரை பார்க்க தொடங்கினர். இதற்கு தூபம் போடுவது போல் அவரை ஒரு போராடும் நாயகியாக வெற்றி செல்வியாக தொடர்ந்து உருவகபடுத்தும் ஊடகங்கள் மேலும் வளர்த்தன. ஒரு பெண்ணாக தாங்கள் ஜெயிக்க முடியாத ஆண் வர்க்கத்தை இவர் ஆள்கிறார் என்கிற நினைப்பே ஒரு சக்தியாக இவருக்கு ஒரு பிம்பத்தை கொடுத்தது. எனவேதான் யாரை கேட்டாலும் இவர் ஒரு பெண்ணாக இருந்தும்....இப்படித்தான் புகழுரையை தொடங்குவார்கள்....

அரசியலில் அவர் வேகமாக கற்று கொண்ட விஷயங்களை திறம்பட
உபயோகித்து எதிரிகளை வீழ்த்தினார். அவர் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போதும் காவல்துறையை பெரிதாக பகைத்துக் கொண்டதேயில்லை. இன்னும் சொல்லப்போனால் காவல் துறைக்கு 
சர்வ சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அதனால் சர்வாதிகார கோட்பாட்டின் படி உளவுத்துறை சிறப்பாக கை கொடுத்தது. ஊரில் போலிசே ரவுடி போல் 
இருந்தால் உள்ளூர் ரவுடி பொத்திகிட்டு போவான் என்பது போல் தலைமையே அராஜகமாக இருக்க அடிமைகள் அண்டி பிழைப்பதே 
சிறந்தது என்று பதுங்கினர். இந்த நிலை எல்லாம் சரியாக இருப்பது 
போன்ற மாயையை உருவாக்கியது. இலவசங்கள் சாதனைகளாக சொல்லப்பட்டது. 

ஒரு சொல்,ஒரு புன்னகை, குடும்பத்தை பற்றி ஒரு ஆறுதல் சொல்
அடிமைகளை ஆயுள் சந்தாக்காரராக மாற்றும் என்னும் வித்தையை
புரிந்து கொண்டு சரியாக பயன் படுத்தினார்.

புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் தன் நலனுக்கும் தன் புகழுக்கும் மட்டுமே பயன்படுத்தினார். ஒரு அரசி போல தன் அரசவையில் தன்னை புகழ்ந்து பாடுவதை ரசித்தார். தருமிகள் கொண்டாடினர்.

ஒரு கட்டவுட் கேட்டால் அடிமைகள் 100 கட்டவுட் வைத்தனர்.
வீட்டை விட்டு வெளியே வந்தால் நகரம் ஸ்தம்பித்தது.
நாளாக நாளாக நேர்மையானவர்கள் இவரை விட்டு விலகினர்.
வெறும் ஜால்ரா கும்பல்களும் தரமற்ற உள்ளூர் தலைவர்களுமே
இவரை சூழ்ந்திருந்தனர். இந்த கூட்டம் இவர்களை தவிர மற்றவர்கள்
ஜெயாவை நெருங்கு விடாமல் பார்த்துக் கொண்டனர். இந்த அமைப்பு ஜெயலலிதாவுக்கு உகந்ததாக இருந்ததால் அவரும் அதை ஊக்குவித்தார்.

விளைவுகளை கண்டு இவர் வருந்தியதே இல்லை.

அது இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை ஒரே இரவில் வேலையை விட்டு நீக்கியபோதும் சரி, சிதம்பரத்தில் பத்மினி காவல்நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்ட போதும் சரி, அவரது எம்.எல்.ஏ.வையே (VPR ரமேஷ்) துரைசாமி மேம்பாலத்தில் அவரது ஆட்சியின் போது வெட்டப்பட்ட போதும் அவர் அதுகுறித்து பொதுவில் ஊடகங்களில் வந்து மக்களிடையே பேச வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. இந்த மூன்றை ஒரு உதாரணத்திற்கே எடுத்துக் கொண்டேன். இது போல பல நிகழ்வுகளுக்கு
இவர் பதில் அளித்ததே இல்லை. நம்ம மொக்கை ஊடகங்கள் நம்மை விட மிரண்டு அவரை கேள்வியே கேட்டதில்லை. கும்பகோண மாகமக விபத்தோ, அல்லது மதுக்கடை மூட கோரிய சசிபெருமாள் மரணமோ இவரை அசைக்க இல்லை.

எத்தகைய புத்திசாலி, வணங்கா முடியாக இருந்தாலும் அவரை தனது காலில் விழ செய்து இவர் மகிழ்ந்தார். அப்படி விழ மறுத்து எதிர்த்தவர்களை எந்த அளவுக்கும் சென்று அசிங்கப்படுத்த முனைந்தார்.
உதாரணமாக நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் கண்டு மிரண்ட டி.என். சேஷனின் மீது இவரது ஆட்சியில் மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இவர் பொறுப்புள்ள முதலமைச்சராக ஒரு விளக்கம் கூட கொடுக்கவில்லை. சுப்ரமணிய சுவாமிக்கு சென்னை நீதி மன்றத்தில் இவருடைய கட்சிகாரர்களால் கொடுக்கப்பட்ட எதிர்ப்பு உலக வரலாற்றில் ஆம் உலக அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டின் பெயரை நார வைத்தது. ஜெயா வருத்தமோ கண்டனமோ செய்யவில்லை. மிகவும் நேர்மையானவர் என்று பேசப்பட்ட முன்னாள் தேர்தல் அதிகாரி மலைச்சாமியை தன்னிடம் அழைத்து பின் அவரை ஒன்றுமில்லாமல் டம்மி ஆக்கினார்.

இந்து மத சாமியார்களும் இவரின் கோபத்திற்கு தப்பவில்லை. சங்கராச்சாரியார் கைது ஒரு உதாரணம். ஒரு பெரும்பான்மை மதத்தின் கோபத்திற்கு ஆளாக நேருமே என்கிற கவலையெல்லாம் அவர் படவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் வீச்சு இவருக்கு தெரிந்திருக்கிறது.
காஞ்சிக்கு கிடைத்த அடி மதுரை ஆதினம் வரை எல்லாரையும் ஒடுக்கியது.

பத்திரிக்கைகளையும் இவர் விட்டுவைக்கவில்லை. இதில் இவர் கருணாநிதியின் பாணியை மேற்கொண்டு அதற்கு மேலும் சென்றார்.
அதாவது முதலில் பேரம் பேசுவது. பிறகு மிரட்டுவது. மீறி போகும் போது
வன்முறையில் இறங்குவது. இல்லையேல் பொய் வழக்குகள் போட்டு
அலைய விடுவது. ஜெயாவின் ஆட்சியில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு வழக்குகள் பத்திரிகைகள் மற்றும் அதன் முதலாளிகள் மீது போடப்பட்டது. இதில் கூத்து என்வென்றால் இது அரசு சார்பான வழக்காக போடப்பட்டதால் அரசு வழக்கறிஞ்சர்கள் ஜெயாவுக்கு தனிப்பட்ட செலவு வைக்காமல் வாதாடுவார்கள். அதே சமயம் பத்திரிகைகள் தங்கள் சொந்த செலவில் இந்த வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும். யாரால் அரசு இயந்திரத்துடன் நெடுங்காலம் மோத முடியும். ?  இதனாலேயே பலரும் பணிந்து போயினர். எதிர்த்து நின்றவர்களும் கருணாநிதியின் பின்புலத்தாலேயே தைரியமாக எதிர்த்தனர். அவர்கள் மீது வன்முறை சில சமயம் கட்டவழித்து விடப்பட்டது. கடைசி உதாரணம். நக்கீரன் பத்திரிகை மீதான தாக்குதல். நக்கீரன் மஞ்சள் பத்திரிகை போன்று செயல்பட்டாலும் அதற்கு ஒரு அரசின் எதிர் வினை வன்முறையல்ல என்பதை ஜெயா ஏற்றுக் கொள்ள வில்லை.

இந்திராகாந்தி போலவே எதிர் கட்சிகளை கூடிய மட்டும் பிளந்து பலமிழக்க செய்வார். அதற்காக தன்னுடைய அத்தனை திறமைகளையும் உபயோகிக்கும் புத்திசாலித்தனம் உண்டு. உதாரணமாக வளர்ந்து வந்த தலித் எழில்மலை போன்ற தாழ்த்தப்பட்ட தலைவரை தன்னிடம் சேர்த்துக் கொண்டு பின் அவரை ஒன்றுமில்லாமல் செய்தார். இதன் மூலம் இவருக்கு தாழ்த்தப்பட்ட ஓட்டும் கிடைத்தது. வளரும் இரட்டை லாபம்.
இதே முறையில் இவர் வைகோ வை அரசியலில் ஒன்றுமில்லாமல் செய்தார். அந்த விதத்தில் இவருக்கு கருணா நன்றிக்கடனே செய்யவேண்டும். இது போல பல வேலைகளை பொழுது போக்காக செய்யக் கூடியவர். ஆனால் எதற்கும் விளக்கம் தர மாட்டார். அது ஒரு அரசியாக தனக்கு தரக்குறைவு என்ற எண்ணமே இவரிடம் இருந்தது. இவருக்காக மற்றவர்களை பேச விட்டு வேடிக்கையே பார்ப்பார்.

இவருடன் இருந்து பின் மாறுபடுபவர்களை இவரது வீட்டுக்கு கூப்பிட்டு தேவைப்பட்டால் செருப்பால் கூட அடிப்பார் என்று கூறுபவர்கள் உண்டு.
இவர் எதற்கும் யாருக்கும் அஞ்சியதாக தெரியவில்லை. இது வீரம் என்று
கொள்ளலாகாது. இது குரூரம் கொண்ட வக்கிரம் என கொள்ளலாம்.

அவர் குற்றவாளி என்று இரண்டு முறை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியும்
அவர் “என்னை கேள்வி கேட்க நீங்கள் யார் “ என்கிற விதத்திலேயே
நடந்து கொண்டார்.

இவர் பற்றிய அனைத்து செய்திகளுமே பிறர் வழி கேட்பதாகவே முடிகிறது. காரணம் இவர் தன்னை பற்றி பொதுவில் பேசுவதில்லை. இவர் மகா புத்திசாலி. “வாராது வந்த மாமணி” என்றெல்லாம் இவரிடம் பலன் அடைந்தவர்களே கூறுவார்கள். எதிரிகளும் போற்றும் வல்லமையெல்லாம் இவரிடம் இல்லை.

எல்லா சர்வாதிகாரிகளும் வாழ்ந்த வாழ்க்கையே இவர் ஒரு ஜனநாயகத்தில் வாழ்ந்தார். அது ஒன்றுதான் வித்தியாசம். ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் இவருக்கு தொடர்ந்து மீண்டு வர வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அந்த அளவில் இவர் புத்திசாலியே. தந்திரசாலியே.

இவருக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு இவர் மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்து இறவா புகழ் அடைந்திருக்க முடியும். அத்தனை வாய்ப்புகளையும் இவர் தனது முட்டாள்தனத்தால் பாழாக்கினார். உதாரணமாக 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் நடந்த தேர்தலில் மக்கள் திமுக மேல் சந்தேகமும் கோபமும் கொண்டு மிகப் பெரிய வெற்றியினை இவருக்கு அளித்தனர்.

அத்தகைய வெற்றியை எம்.ஜி.ஆர் கூட பெற்றதில்லை. ஆனால் நடந்தது என்ன ?  தமிழகம் வரலாறு காணாத கேவலங்களை கொள்ளைகளை ஊழல்களை கண்டதுதான் மிச்சம். அந்த ஐந்து வருடங்களில் இவர் செய்த குற்றங்கள் இவரது வாழ்நாள் முழுவதும் துரத்தியது. அந்த தவறுகளை மறுக்கவும், மறைக்கவும், அதன் விளைவுகளை எதிர்த்தும் இவர் மேலும் பல தவறுகளையும் செய்ய வேண்டியிருந்தது. அப்படி செய்ய அதற்கான ஆட்களையும் தொடர்ந்து கூட வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் தன தவறுகளுக்கு தானே சிறையானார். இரையானார்.

இப்படி ஒரு தலைமை வருவதற்கும் வளர்வதற்கும் அவர் மட்டும் காரணமல்ல. கடந்த 50 வருடங்களாக தமிழ்நாடு தனிமனித பகைமையில் பிரிந்து அந்த வெறுப்பு அரசியலே கொள்கைகளாக வகுத்துக் கொண்டது.
இதற்கு முழு பொறுப்பும் திமுக வையும் அதன் தலைவர் கருணாநிதியையே சாரும். இப்படிப்பட்ட தனிமனித அரசியல் செய்தே அவர் கட்சியை வளர்த்தார். வளைத்தார். இவருடைய அரசியல் நிழலே தமிழ்நாட்டை திசை திருப்பி பின் எம்.ஜி.ஆர்.ம. ஜெயாவும் அதை வேறு 
பாதையில் கொண்டு சென்று விட்டனர். இத்தகைய தமிழக சூழலுக்கு 
சற்றும் குறையாமல் மோசமாகி வந்த மத்திய அரசு அரசியலும் இந்த சீரழிவிற்கு உரமிட்டது. மாநில தலைமைகளை தொடர்ந்து சீரழித்து ஒரு குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயன்ற காங்கிரஸ் போன்ற தேசிய தலைமைகள் இங்கு பேச வக்கற்று போயின. உண்மையில் ஜெயா போன்ற புத்திசாலி பிடிவாதவமான ஆளுமையை கண்டு அவர்கள் பம்மினர் என்றே சொல்ல வேண்டும். எல்லாம் ஒரு சுயநலமே. 
கட்சிகள், அரசு அதிகாரிகள், ஊடகத்துறைகள், நீதித்துறையினர் காவல் துறையினர் என்று சுயநலம் சமுகத்தின் எல்லா தளங்களிலும் வியாபித்ததால் ஒரு இரண்டு தலைமுறை தாங்கள் செய்வது தவறு இல்லை. புத்திசாலித்தனமே என்று நம்ப தொடங்கிவிட்டனர். அதை மிகச் சரியாக உபயோகித்தார் ஜெயா.  சீரழிந்த ஒரு சமுகத்தின் அடையாளம் அவர். 

 சரியாக வளர்க்கப்படாத ஒருவர் சந்தர்ப்ப வசத்தால் ஒரு நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்தால் அது ஒரு விபத்தே. அதன் விளைவை இந்த தமிழ்நாடு வெகுநாள் அனுபவிக்கும். காரணம் ஒரு நாட்டின் தலைமை தவறுகள் தலைமுறைகளை பாதிக்கும். #jaya, #jayalalitha #amma







Thursday, August 04, 2016

பார்ப்பன வெறுப்பு - நியாயமா !!

எச்சரிக்கை: மிக நீண்ட பதிவு... 

என் நண்பர் சமிபத்தில் என்னை கேட்ட கேள்வி கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இதை முன்பே பலமுறை சிந்தித்ததுண்டு. 
தமிழ் சமுகத்தில் பிராமணர்கள் மட்டும் ஏன் இத்தனை வசைகளை வெறுப்பையும் சந்திக்கின்றனர்? உண்மையில் இந்த சமுகம் ஒட்டு மொத்தமாக இந்த வசைக்கு தகுதியானதுதானா? இவர்கள் மீது கற்பிக்கப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும கதைகளுக்கும் எத்தனை ஆதாரங்கள் உண்டு? இந்த தமிழ் சமுதாயத்தில் நல்லதாக எந்த வித பங்களிப்பையும் இந்த சமுகம் செய்யவே இல்லையா? மக்கள் தொகையில் (தமிழகத்தை பொறுத்தவரை) வெறும் இரண்டு சதவிகதமே உள்ள ஒரு ஜாதி எப்படி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே வழி நடத்தியதாக அல்லது சீரழித்ததாக தொடர்ந்து சொல்லப் பட்டு வருகிறது.? அப்படியென்றால் மிச்சம் 98 சதவிகித மக்கள் சிந்திக்கவேயில்லையா ? 
திராவிட கட்சியினரோ அல்லது மற்றவரோ இதற்கு ஒற்றை வரியில் "அதுதான் பார்பன சூழ்ச்சி" என்று கடந்து போகலாம். அல்லது "பெரியாரை படி அவர் எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டார்" என்று பெரியாரே முற்றிலும் முடிவாக ஒரு 3000 வருட சரித்திரத்தை முடக்கி போடலாம். அதுவும் இல்லையென்றால்..." நாங்கள் பார்பனரை சொல்லவில்லை. பார்ப்பனியத்தை தான் சொன்னோம்" என்று திமுக பாணியில் விலகி போகலாம். ஆனால் இது யாவும் சரியான பதில்கள் அல்ல. 
 பார்பன எதிர்ப்பில் பல கற்பிதங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
 எதையும் சொல்வதற்கு முன் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். நாம் பேசப்போகும் தமிழகத்தின் இன்றைய மக்கள் தொகை 7 1/2 கோடி. ஆனால் சுமார் 1000 வருடங்கள் முன்பு இந்த தமிழகத்தின் மக்கள் தொகை 5 முதல் 10 லட்சம் இருந்தால் அதிகம். (1930 லேயே சென்னையின் மக்கள் தொகை வெறும் ஒரு லட்சம்தான்.) ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 30 முதல் 40 வீடுகளே இருக்கும். இதில் அனைத்து சாதியினரும் எல்லா பொருளாதார சிக்கல்களும் அடக்கம். இந்த பின்னணியில் நான் சொல்வதை பார்த்தால் நலம்.
 1960 முன்பு பார்பனர்கள் எல்லோரும் பெரும் நிலச்சுவான்தார்களாக இருந்தனர் என்னும் மாயை. (ஆண்டைகள்). இதற்கு அடிப்படை : சோழர்கள் காலத்திலேயே மன்னர்கள் பல கிராமங்களை அந்தணர்களுக்கு தானமாக கொடுத்தார்கள். சோழர்கள் காலத்திலாகட்டும் இன்றாகட்டும் அந்தணர்களின் சமுகம் 2 அல்லது 3 சதவிகிதத்திற்கு மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் மக்கள் தொகையில் அந்தணர்கள் மட்டும் பெரும் அழிவிற்கு ஆளானதாக சரித்திரம் இல்லை. எல்லோருக்கும் நடந்ததே இவர்களுக்கும் நடந்து வந்துள்ளது.
 "சதுர்வேதி மங்கலங்கள் இறையிலி நிலங்கள் கூட ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்டவை. தனிப்பட்டவை அல்ல. அவற்றின் மூலம் அவர்கள் நிலக்கிழார்களாக எல்லாம் ஆகியிருக்க முடியாது." (நன்றி.: அ.நீ ) 
அப்படி இருக்க இவர்கள் மட்டும் எப்படி எல்லோரும் ஆண்டைகளாக இருக்க முடிந்திருக்கும் ? மேலும் தமிழகத்தில் எந்த பகுதியிலும் அந்தணர்கள் அரசர்களாக இருந்ததாக சரித்திரமும் இல்லை. குறுநில மன்னர்களாக இல்லை. பாளையக்காரர்களாக இருக்கவில்லை. பெரிய ஜமீன்தாரர்களாக (இந்த பட்டங்கள் வெள்ளையர்காலத்தில் வருகின்றன) இல்லை. மிராசுதார்களாக ??? (இதுவும் வெள்ளையர்காலத்து பட்டம்)
 சரி..
கணக்குக்காக ஒரு 10 மிராசுகள் என்று வைத்துக் கொள்வோம். மீதி....??? ஆக...எந்தகாலத்திலும் அந்தணர்கள் பெரும் நில கிழார்களாக இருந்ததேயில்லை. பின் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? கோவிலில் பூஜைகள் செய்வதை தவிர ? மன்னர்கள் அவைகளில் திவானாக (ஒருவகையான கணக்கரே!!) ..இதுவும் எல்லா மன்னரிடம் இல்லை. ஒரு சில மன்னரிடம் மட்டுமே!!! பெரும்பணக்காரர்களிடம் கணக்குபிள்ளையாக, கிரமாத்தில் கர்ணமாக, முன்சீபாக, இன்ன பிற உத்தியோகஸ்தர்களாக.... இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு நிலம் இருந்திருக்கலாம். வீடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவை எந்த காலத்திலும் மொத்த விவசாய நிலப்பரப்பில் 5 விழுக்காடுகளுக்கு மேல் கை கொண்டிருக்க இருக்க வாய்ப்பே இல்லை. மீதி 95 சதவிகித நிலம் மற்ற ஜாதியினரிடமே இருந்து வந்துள்ளது. 
 உதாரணத்திற்கு...திருவாரூர்கருமுத்து தியாகராஜர செட்டியார் குடும்பத்தின் பரம்பரையாக சொத்து ஆயிரம் வேலிகளுக்கும் அதிகம்.. தஞ்சை மூப்பனார் பரம்பரை பல காலங்களாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கொண்டுள்ளனர். பூண்டி வாண்டையார் குடும்பமும் பெரும் நிலகிழார்களே.. 
இப்படி பல அப்படி இருக்க இவர்கள் மட்டுமே எப்படி ஒரு அடிமைத்தனமான சமுகத்தை கட்டமைத்த குற்றத்தை சுமப்பது ? 
 நியாயமில்லையே... 
அடுத்தது பார்பனர்கள் மற்றவர்களை கல்வி கற்பதை தடுத்தார்கள். அடிப்படை : பார்பனர்கள் மற்றவர்களுக்கு வேதங்களை சொல்லி தர மறுத்தனர். உண்மை என்ன? 
வெள்ளையர் வருமுன்...இங்கு கல்வி என்பது அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே இருந்து வந்துள்ளது. ஆகவே அந்த அந்த சமுகம் தம் ஜாதியின் குடும்பத்தின் அடிப்படையிலேயே கற்ப்பித்தலில் இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல துறைகளில் குடும்பத்திற்கு வெளியில் கற்பித்தல் இல்லவேயில்லை.இதன் அடிப்படை காரணம் பொருளாதாரமே !! எந்த தொழிலிலும் யாரும் பெரும் பணக்காரர்களாக வளர்வது எளிதானதில்லை. ஒவ்வொரு ஊரிலும் பெரிய அளவில் போட்டியின்றி எல்லா தொழில் சார்ந்த ஜாதியினரும் இருந்ததாலும் அன்றைய சமுக கட்டமைப்பு பெரிய அளவில் பணம் சார்ந்து இல்லாமல் இருந்ததாலும் அவரவர் தம் குடும்பத்தினருக்கே தம் தொழில் கல்வியை கற்பித்தனர். சுயநலம்தான்.
 பணக்காரன என்பது நில உடைமையைசார்ந்து இருந்த வரை ஒருவன் பெரும்பாலும் பிறப்பாலேயே பணக்காரனாக முடிந்தது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு. வணிகம். இதில்தான் ஒருவர் ஒரு தலைமுறையிலேயே பெரும் பணக்காரராக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அந்தணர்கள் வணிகம் செய்ததில்லை. (அந்த காலத்தில் ).. இந்த சூழ்நிலையில் இருக்கும் ஒரே கோவிலில் மணி அடித்து கலம் நெல்லை வாங்கும் உரிமையை வேறு ஒருவருக்கு யார்தான் விட்டுக் கொடுப்பார்கள் ? 
பின் கல்வி மறுத்தான் என்பது எப்படி சொன்னார்கள் ? இங்கு கல்வி என்பது எப்படி மாறியது என்ரூ பார்க்க வேண்டும். வெள்ளையர் வந்தவுடன் இந்த பழைய கணக்கு பிள்ளைகள் பங்கு முக்கியமானதாக மாறியது. இவர்கள் வெகு விரைவாக மாற்று மொழியை கற்க நேரமும் வாய்ப்பும் கிடைத்ததனால் சமுதாய ஏணியில் முக்கிய பங்கு வகிக்க தொடங்கினர். 

துபாஷி....(இரட்டை மொழி பேசுபவர்) பதவியை அந்தணர் மட்டுமல்ல நாயுடு, நாயக்கர், முதலியார், செட்டியார் போன்ற மற்ற சமுத்தினரும் வகித்தனர். ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த ஒரு வேற்று நாட்டுக்காரனுடன் அவன் மொழியை கற்று உரையாட வணிகம் செய்ய இவர்கள் தேவைப்பட்டார்கள். பின் இவர்களின் முக்கியத்துவம் அதிகரிக்க அதிகரிக்க இந்த பதவியிலும் போட்டிகள் உண்டாயிற்று. இதே காலத்தில்தான் வெள்ளையர் தம் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கினர். பக்கத்திலேயே இருந்த இந்தஜாதியினர் மாறிவரும் இந்திய தமிழக சூழ்நிலையில் இந்த வாய்ப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டு உடனே அதை பயன்படுத்தி கொண்டனர். 
இது எப்படி என்றால்...கணினி அறிமுகமான பொழுது அதிகம் படித்தவர் நகரத்தினரே ...அதனால் முன்னேறியவர்கள் அவர்களே...அதே சூழ்நிலைதான் வெள்ளையரின் ஆங்கில கல்வி அறிமுகபடுத்தப் பட்டபோது. .. ஆகவே அன்று போட்டியின் காரணமாக பல்வேறு காரணங்கள் சொல்லி தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது மற்ற தொழில் புரிவோர்களும் இந்த ஒரு சிலரால் ஆங்கில கல்வி மறுக்கப்பட்டது. 
அன்று அது பலருக்கு தேவைப்படவும் இல்லை. பண்ணையில் வேலை செய்ய ஆள் குறையும் போது அவன் போய் பள்ளியில் அமர்ந்தால் பண்ணையார் சும்மா விடுவாரா? இதற்கு அந்த வாத்தியார் துணை போனாலும் நடக்குமா ? பொருளாதாரம் எல்லாவற்றையும் விழுங்கிவிடும். 
 1947 வரை பள்ளி கல்வி தனியாரிடமும் அதுவும் அந்தஅந்த ஊர்பெரும் பணக்கார் குடும்பத்தாரிடையேதான் இருந்தது. அப்படி இல்லை என்றால் வெள்ளையரை சார்ந்த கிறிஸ்துவ அமைப்பினரிடையேதான் இந்த கல்வி அமைப்புகள் இருந்தன. இந்த கல்வியும் வெறும் 100 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுக படுத்தப்பட்டது தான். 
 காமராஜர் காலத்துக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பள்ளிகள் இருந்தன ? அவைகளில் யார் யார் படித்தனர் என்று ஒரு ஆய்வு செய்தால் விளங்கும். எனவே...பார்பனந்தான் கல்வியை எல்லோருக்கும் செல்லாமல் தடுத்தான் என்பது முற்றிலும் உண்மையில்லை.
 அந்தணர்கள் தங்களின் தொழில் சார்ந்த இடமான கோயில்களில் தாங்களே இருக்க விரும்பி அதை. சுற்றியே தங்கள் வாழ்வியலை அமைத்து கொண்டனர். இது ஒரு கருத்து. பிராம்மணர்களாக விரும்பி கோவிலைச் சுற்றி குடியிருப்புகளை அமைத்து கொள்வதும் சமுதாய விதிகள் அவர்களை அப்படி அமைக்க நிர்பந்தித்தன. மேலும் "ஒரு ஊரில் பஞ்சம் வந்தால் பிராம்மண சாதிகள் பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு செல்வது கூட தடை விதிக்கப்பட்டுள்ளது"  - இதுவும் ஒரு கருத்து - நன்றி அ.நீ . 
ஆனால் அவர்கள் தங்கள் ஜாதியினரே ஆனாலும் தொழில் சார்ந்த கல்வி தகுதி அடைவதில் யாருக்கும் எந்த விதி விலக்கும் அளிக்கவில்லை. 14 வருடம் வேத பாடசாலையில் படிக்க வேண்டும் என்றால் படித்தே ஆகவேண்டும். அப்படி படித்தவனே "கனபாடிகள்" என்கிற உச்ச தகுதிக்கு உரியவனாகிறான். மற்ற அந்தணர்கள் தகுதியில் அவனுக்கு கீழேதான். 

இவர்களின் தொழில் ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்ததால் அதை அதிகமாக உயர்த்தி பேசி அதன் புகழை அவசியத்தை தக்க வைத்து கொண்டார்கள். மற்றவரை சட்டென்று உள்ளே வரவிடாமல் செய்ய மொழியை (சமஸ்கிருதம்) ஓரளவு பயன் படுத்திக் கொண்டனர். இது கூட ஒரு பகுதிதான். காரணம் அந்தணர்களில் ஒரு பகுதியினரான வைஷணவர்கள் முற்றிலும் தமிழ் மொழி சார்ந்தே வழிபாட்டு வந்துள்ளனர். ஆகவே தமிழ் மொழி இவர்களுக்கு அந்நியமல்ல. மற்றபடி பார்ப்பனர்களின் தமிழ் பற்று பற்றி இங்கு விலாவரியாக சொல்லி நேரம் பாழ்படுத்த விரும்பவில்லை. "பிராம்மண வர்ணம் என்பதற்குள் பல சாதியினர் காலம் காலமாக வந்திருக்கின்றனர். அவை எல்லாம் தொடக்கம் முதலே பிராம்மண சாதிகள் கிடையாது. எனவே ஏதோ ஐயாயிரம்/இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதிகளே பிராம்மணராக இருந்திருக்கின்றன என்பதெல்லாம் வரலாற்று அடிப்படை அற்ற rhetoric".- நன்றி. அ.நீ . மற்றபடி அவரவர் சாதிக்கேற்றவாறு அவரவர் சாமிகளை படைத்து வணங்கி வந்துள்ளனர். அவரவர் சாதிக்கேற்ப கிராம பூசாரிகளும் உண்டாயினர்.பிராமணர் அல்லாமல் ஓதுவார்கள், பண்டாரங்கள் என்று பலரும் அவரவர் வழியில் இறைவழிபாட்டை செய்து வந்தே உள்ளனர். 
 உதாரணமாக..மதுரை ஆதினம் பல நூறு ஆண்டுகளாக (திருஞ்சானசம்பந்தர் காலம் முதல்) பிராமண அல்லாதோர் கொண்டே நடத்தப்படும் மடம் ஆகும். அதே போல்தான் தருமபுரி ஆதினமும். இன்னொன்று திருப்பானந்தாள் ஆதீனம். ஆக இறை வழிபாட்டிலும் இவர்கள் பெரிய ஆளுமையாக (சிதம்பரம் தவிர) இல்லை. மேலும் சைவ வைணவ இறை வழிபாட்டையே இவர்கள்தான் கொண்டுவந்தனர் என்பது தமிழ் சமுதாயத்தின் தொன்மையையே அவமதிப்பதாகும். 
 பின் எங்குதான் இந்த பிராமணர்கள் தப்பு செய்தார்கள்?
 இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இல்லை. மண்ணின் மைந்தர்கள்தாம். ஆனாலும் பெரிய அளவில் நில உரிமையாளர்களாக இல்லாமல் போனதால் இவர்கள் எப்போதும் அதிகாரம் இருப்பவர்களை அண்டியே பிழைப்பு நடத்தியுள்ளனர்.வெள்ளையர் வருமுன்பு மன்னர்களுக்கும், ஜாமீந்தார்களுக்கும் துணை போன இவர்கள் பின்னர் வெள்ளையரின் அணுக்கத்தில் வேகமாக அதிகாரத்திற்கு வெகு சமீபத்தில் இருக்க தொடங்கினர். அதற்கு படிப்பு மட்டுமே வழி வகுக்கும் என்பதை அறிந்து கொண்டு அதை கெட்டியாக பிடித்து கொண்டு தம் வாழ்வை ஸ்திரப் படுத்தி கொண்டனர். அதிகாரத்தின் பக்கத்தில் இருந்து கொண்டு அதன் பலனை அனுபவிக்கும்போது அந்த அதிகாரத்தின் தீய விளைவை கண்டிக்காமல் போனார்கள். இன்னும் சொல்லப் போனால் அநியாயங்களுக்கு துணை போனார்கள். பல சமயங்களில் அதை நியாயப்படுத்தினார்கள். சாத்திரங்களோ, கதைகளோ, எதுவுமே திரிக்கப்பட்டு இவர்கள் மூலமாக சொல்லப்பட்டதின் விளைவு இவர்களே அதை முன் வைத்ததால் இவை இவர்களுடையாதாகி போனது. வர்ணாசிரமம் இருந்தது உண்மை. தொழிலின் அடிப்படையில் பிறந்த இந்த ஜாதி பின் காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஆகிப் போன கொடுமை இல்லை என சொல்ல இயலாது. ஆனால் வர்ணாசிரமம் என்பதை இவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பது திரிபு. இதுவும் நிலவுடமை மற்றும் பொருளாதார நோக்கத்திலேயே தான். நிலைநிறுத்தப் பட்டது. நிலமில்லாத விவசாய தொழிலாளர்கள் மற்றும் வேறு சில தொழில் புரிவோர்கள் நாளடைவில் ஒடுக்க்பட்டவர்களாகி போனார்கள். 
 உதாரணமாக நில உடமை மற்றும் சொத்துக்களின் பின்னணியில் எப்படி சொந்தத்தில் திருமணம் செய்வது சடங்காகி போனதோ அப்படியே இதுவும். சில சமயம் சொத்துக்களை தாண்டி தம் பிள்ளைகள் தம் முன்னே பாதுகாப்பாக இருப்பதை முன்னிறுத்தியும் இந்த திருமணங்கள் நடந்தன. காலப் போக்கில் இது முறை மாமன் உரிமையாகிப் போனது. சொந்தத்தில் திருமணம் செய்வது சரியா தவறா என்று இங்கு நான் ஆராயவில்லை. அதன் காரணிகளே ஆராயப்படுகின்றன. பொருளாதாரத்தில் தொடங்கிய சாதியை சாத்திரங்கள் பேரை சொல்லி நிரந்தரமாக்கும் போது பிரச்சனை வெடிக்கிறது. 
 புலையனின் உருவத்தில் சிவனை கண்ட ஒரு மதம் எப்படி தீண்டாமையை போதிக்கும்.? தள்ளி நில் என்று சொன்ன தவறுக்காக புலையன் காலடியில் ஆதி சங்கரர் வீழ்ந்தார் என்று கதை வரும் மதம் தீண்டாமையை போதிக்குமா? 
யாதவ குலத்திலும், ஷக்திரிய குலத்திலும் கடவுள் அவதரித்ததாக சொன்ன மதம் தீண்டாமையை போதிக்குமா ? பின் என்ன நடந்தது ? 
பொருளாதாரம். சுயநலம். இது மனித இயல்பு..
இன்று சாதி..நாளே வேறு ஒன்று என்று எப்போதும் மனிதர்கள் தங்களை மற்றவர்களை விட கொஞ்சம் உயர்ந்தவர்களாகவே காட்டி கொள்ள எல்லா பிரயத்தனமும் செய்வார்கள். இதில் தமிழ் சமுதாயம் விதி விலக்கு இல்லை. அந்த ஜாதிய திரிபின் முன்னணியில் இவர்கள் இருந்ததினால் இவர்களும் குற்றம் சொல்லப்பட வேண்டியவர்களே.. மேலும் ஒரு முக்கிய காரணி...இங்கு பரவிய கிறிஸ்துவம். வெள்ளைக்காரன் வெறும் வணிகத்தை மட்டும் கொண்டு வரவில்லை. தன்னுடன் மத போதகர்களையும் கொண்டு வந்தான். உண்மையில் 17 நூற்றாண்டுகளில் ஆசியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டடைய ஐரோப்பிய மன்னர்களின்ஆதரவை தேடிய மாலுமிகள் வெறும் வியாபார பலன்களை மட்டும் சொல்லி பணமும் ஆதரவும் கேட்கவில்லை. இந்த பயணங்கள் கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்கும் முக்கியமானது என்றே ஆதரவு திரட்டினர்.
 அப்படி வந்த கிறஸ்துவ பிரசாரகர்கள் இங்கிருக்கும் கட்டமைப்பை தவறாக புரிந்து கொண்டு தங்கள் பிரச்சாரத்தை கை கொண்டனர். மன்னரையோ, ஜமீந்தாரையோ வீழ்த்துவது பின்னாளில் மட்டுமே சாத்தியமானது. அதுவும் அரசியல் மற்றும் போர்களின் அடிப்படையிலேயே.. மேலும் இது போன்ற அரசியல் தலைமைகளின் பலம் இந்த மத மாற்றத்திற்கு பெரிதும் தேவை பட்டது. எனவே நேரடியாக இவர்களை இந்த மத மாற்ற பிரசாரகர்கள் தாக்கவில்லை. மற்றபடி மதத்தின் பிராசாரத்தில் எதிரி இந்து கடவுளின் அருகே இருப்பதாக காட்டி கொண்ட பிராமணரே என்று கண்டு கொண்டு அவரையே தூற்ற தொடங்கினர். யாரை இந்த சமுகம் பாவம் புண்ணியம் பார்ப்பான் , நியாயம் பேசுவான் என்று நம்புகிறதோ அவனை அயோக்கியனாகவும், தவறானவனாக சித்தரித்து சந்தேகத்தை கிளப்பினால் அந்த சமுதாயத்தை வீழ்த்துவது எளிது என்பது அடிப்படை தந்திரம். பிரித்தாளும் சூழ்ச்சி இங்கும் சிறப்பாக வேலை செய்தது. செய்தார்கள். 

சாதீய சமுகத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தங்களை தலையாக சொல்லிக் கொண்டதனால் வெட்டு முதலில் கழுத்தில் தானே விழும் ? விழுந்தது. காலம் மாற பத்திரிக்கைகளும் ஊடகங்களும் போக்குவரத்தும் முன்னேற முன்னேற மனிதர்களின் தொடர்பு எல்லைகள் விரிவடைந்தன. கிறிஸ்துவ அடிப்படையில் அமைந்த ஆங்கில கல்வி புதிய (தவறோ சரியோ ) சிந்தனைகளை தூண்டின. அடிப்படையே தெரியாவிட்டாலும் அவர்களால் நம் சமுதாயத்தை பற்றி தங்கள் வசதிக்கேற்றவாரு வளைத்து எழுதி கற்பிக்க முடிந்தது. 
 இந்த காலகட்டத்தில் பிராமணர் அல்லாதோரும் இந்த அதிகார (வெள்ளை அரசு ) பங்கீட்டில் தங்கள் நிலைக்காக பேச கிளம்பினர். பெரியார் போன்றோர் அன்றைய காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கேள்வி கேட்டனர். தவறில்லை. ஆனால் அதற்கு ஒட்டு மொத்த பழியையும் ஒரே ஜாதி மேல் ஏற்றியதுதான் தவறு. அவருடைய தனிப்பட்ட அனுபவங்களில் கூட தமிழகத்தில் தொடக்க காலத்தில் அவரோ அவரது குடும்பமோ மோசமாக நடத்தப் பட்டதாக சொல்லமுடியாது. பின்னாளில் அவர் பிரமாணர்களின் மீது விஷம் கக்க தொடங்கிய பிறகு கூட ராஜாஜி போன்றவர்கள் அவரை மதித்தே வந்தனர். ஆனால் பெரியார் போன்றோருக்கு பிராமண எதிர்ப்பு என்பது ஒரு முகமூடியே. ஆனால் அவரால் வேறு என்ன செய்ய முடியும் ? திருப்பி அடிக்காத மேல் சாதியாக பாவிக்கபட்டவன் பிராமணன் ஒருவன்தான். எனவே அவனை பலி கொடுத்து விட்டனர். தாழ்த்தப் பட்டோரை பற்றி பெரியாரின் கருத்து நாடே அறியும். தங்களை பற்றி சொல்லாதவரையிலும் எல்லாம் நலமே என்று மற்றவரும் சும்மா இருந்துவிட்டனர். (இன்றுவரை அதுதான் நிலை. ) இந்த நிலை மற்ற சாதிகளுக்கு வசதியாகவும் போயிற்று. இந்த திசையில் பயணம் செய்தால் அரசியல் வெற்றி, காசு, பதவி கிடைக்கும் என்கிற போது எல்லோரும் தங்களையும் வஞ்சிக்கப்பட்ட கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு தம் தம் பங்கை பெற்றனர். இதில் ஆண்ட பரம்பரையினர், ஆளாத பரம்பரையினர் எல்லோரும் ஐக்கியமாயினர். இந்த பிளவுகளுக்கும் தவறான புரிதலுக்கும் முக்கிய பங்காற்றிய அந்நிய மத அமைப்புகள் இந்த குழம்பிய குளத்தில் நன்றாக மீன் பிடித்தனர். பின்னாளில் சினிமா இந்த மாயையை ஊதி பெரிதாக்கியது. மீண்டும் மீண்டும் ஏன் சொல்கிறோம் என்று தெரியாமலேயே பிராமணர்களை பற்றி காதால் கேட்டது கேட்காதது அவன் சொன்னது இவன் சொன்னது எல்லாவற்றையும் அரங்கேற்றினர். சினிமா தான் பரந்து பட்ட தமிழகத்தின் வேதமாயிற்றே. எனவே பலரும் இவைகளை உண்மை என்றே நம்ப தொடங்கினர். 

 ஆக இந்த தமிழ் சமுதாயத்தில் எல்லா சாதியினரை போல் இந்த பார்பன சாதியினரும் தங்களை தக்க வைத்து கொள்ள சுயநலமாக செயல்பட்ட ஒரு அங்கம் தான். நடந்தவைகளுக்கு இவர்களை மட்டும் குற்றம் சொல்வதால் தமிழகம் வாழ்ந்து விடுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்று தமிழகத்தில் அரசு வேளைகளில் 2 சதவிகிதம் கூட பார்பனர்கள் கிடையாது. காவல் துறையில் 2 சதவிகிதத்திற்கு கூட கிடையாது. வறுமையின் காரணமாக கிராமத்தை விட்டு 30 களில் 40 களில் நகரத்தை நோக்கி நகர்ந்த ஒரு ஜாதி பின்னாளி அந்த நகரத்தின் அதிகாரங்களில் ஒதுக்கப்படும் போது வேறு வேறு வழிகளை தேடுகிறது. இதற்கு இவர்களின் கல்வி பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையும், கடந்த 4 தலைமுரைகளாக கல்வி கற்ற பாரம்பரியமும் பெருமளவு உதவுகிறது.

 முதலில் ஆசிரியர் என்று தொடங்குகின்றனர். அப்போது மற்ற மருத்துவும், பொறியாளர் என்பது எல்லாம் வெள்ளையரிடமே இருந்தது. பின்பு அதே மருத்துவம் பொறியாளர் போன்ற கல்விகளில் தேர்ந்து முக்கிய பதவிகளில் இருந்தனர். பிறகு இந்திய அரசியல் அமைப்பின் கீழ் போட்டி வலுத்து இவர்கள் அரசாங்க வேலைகளை பெருமளவு இழக்க நேருகிறது. இவர்கள் அரசு வேலையிழப்புக்கு பிறகு வங்கி மற்றும் காப்பீடு துறையில் நுழைந்தார்கள். அங்கும் போட்டி பயமுறுத்த இவர்கள் அப்போது தொடக்கத்தில் இருந்த கணினி துறையில் நுழைந்தார்கள். முதலாம் தலைமுறை கணினி படித்தவர்களில் பெரும்பாலோர் முன்னேறிய சமூகத்தினர் எனப்படும் பார்ப்பனரே. இதன் பலன் இன்று இந்த பிரிவினர் பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளில் புகுந்துவிட்டனர். 

 இது சாதனையின் எக்களிப்பும் அல்ல. வேதனையின் புலம்பலும் அல்ல. ஒரு மாற்றத்தின் பதிவு. அவ்வளவே.. 

இது போல் ஒவ்வொரு ஜாதியினரும் பொருளாதார ரீதியில் முன்னேறியே உள்ளனர். சுதந்திரத்திற்கு பின் நாடார்கள் வணிகத்தில் இறங்கி சாதியின் அடிப்படையில் ஒரு குழுவாக இயங்கி பெரும் வெற்றியயை கண்டுள்ளனர். நகரத்தார் சமூகத்தினர் வட்டித் தொழிலில் முன்பிருந்தாலும் மாறிவரும் சமுதாய சூழலுக்கு ஏற்ப வங்கித் தொழிலில் நுழைந்தது பெரும் வெற்றி கண்டுள்ளனர். இவர்கள் விட்ட இடத்தை வட்டித்தொழிலில் மார்வாரி இனத்தனவர் நுழைந்தது வளம் பெற்றனர். இப்படி ஒவ்வொரு ஜாதியினரும் வாய்ப்புகளை தொடர்ந்து தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியே வந்துள்ளனர். உழைப்பை தாண்டி ஜாதியின் பின்புலம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இவர்கள் எல்லோருக்கும் உதவியுள்ளது. இப்படியுள்ள சமுதாயத்தில் பிராமணர்களை மட்டும் நோவதேன்...? 

பிராமணர்கள் தவறு செய்யவில்லை என்று வாதிட முடியாது. ஆனால் அவர்கள் மட்டும்தான் தவறிழை த்தவர்கள் என்று கட்டுவது மகா பொய். மேற்கூறிய பல பொய்யான கற்பிதங்களை தொடர்ந்து சொல்லி வந்ததின் பலன் என்ன வென்றால், எதையும் சிந்திக்காமல் மற்றவர்களை போல இதை இந்த பிராமணர்களே ஒரு இரண்டு தலைமுறையாக நம்பத்தொடங்கி விட்டனர். இவர்கள் தங்களுக்குள் ஒரு வித குற்ற உணர்வில் புழுங்க தொடங்கி விட்டனர். இதனால் விளைந்த நற்பயன் என்ன வென்றால் "சுய பரிசோதனை" வேகமாக இந்த சாதியில்தான் தோன்றி ஓரளவு இவர்கள் மாற தொடங்கினர். ஆனால் மாற்றம் என்பதை இவர்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாக புரிந்து கொண்டனர். அதாவது தமிழ் சமுகத்தை விட்டு விலகிப் போதல்.. இது தவறு. இந்த தமிழ் சமுகம் எல்லோருக்குமானது. மாற்றங்களை முன்னெடுக்காமல் விலகிப் போவது பலன் தராது. தமிழ் சமுதாயம் மட்டுமல்ல தேசிய விடுதலை போராட்டங்களில் பிராமணர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. வெள்ளையனிடம் அதிக எண்ணிக்கையில் வேலை பார்ததினாலோ என்னவோ விடுதலை போராட்டத்திலும் பெரிய பங்காற்றினார்கள். சுப்ரமணிய சிவா, வீர வாஞ்சி, பாரதி , மதுரை வைத்தியநாத ஐயர், ராஜாஜி இப்படி போகிறது ஒரு பட்டியல். இந்திய விடுதலைக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத இந்த வலது சாரிகளும், திராவிட இயக்கங்களும் இன்று இதே பிராமணர்களை தேச விரோதிகள் போல் ஏசுவது நகைப்பிற்குரியது. வைக்கம் பெரியார் என்று கூவும் இவர்கள் சேலத்தில் ராஜாஜியும், மதுரையில் வைத்தியநாத ஐயரும் தலித்துக்களுடன் ஆலய பிரவேசம் செய்ததை ஏன் கூற மறுக்கிறார்கள்.?

 பிராமணர்கள் பெரியாரை தாண்டி தமிழகத்தை நேசிக்க பழகியிருக்க வேண்டும். கருணாநிதியும் பெரியாரும் தமிழர்களின் ஒரு சிறு பகுதியின் அடையாளமே என்று தாண்டி தமிழருக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழுக்கு குரல் கொடுக்க வேண்டும். ராஜாஜியும், வைத்தியநாத ஐயரும் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றிருந்தால் பாதி பிரச்சனைகள் இருந்திருக்காது. அதைத்தான் இன்று இந்துமதம் இவர்களிடம் எதிர்பார்க்கிறது. பலர் செய்கிறார்கள். அதை இன்னமும் நாடறிய செய்ய வேண்டும்.

 பிராமணர்களை வசை பாடுவதும். ஒரு வகையான மடை மாற்றம் செய்யும் உத்திதான். பெரியார் தொடங்கி வைத்த இந்த அடிதடியில் இன்று அனைவரும் சங்கமம். ஒரு விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் அடுத்த இரண்டு தலைமுறையில் பழைய அழுக்குகள் மறைந்து புனித பட்டயம் கட்டப்படும் என்று நம்பி செய்யும் வியாபாரம் இது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் : குடுமி வைத்து கொள்ளும் வழக்கம் தமிழ் நாட்டில் பன்னெடுங்காலமாக அனைத்து சாதியிலும் இருந்து வந்தது. வீட்டில் இருக்கும் வயாதான பெரியவர்களை கேட்டால் இது தெரியும். மற்ற சாதியினர் சென்ற நூற்றாண்டின் இடையில் அதாவது 1930 களிலேயே மாறிவிட்டாலும் கடைசி வரை தங்கள் தொழில் சார்ந்த அடையாளமாக இன்னமும் இதை தொடர்பவர்கள் பிராமணர்களில் ஒரு பகுதியினரே . ஆனால் குடுமி என்பதே எப்படி ஒரு ஜாதியின் அடையாளமாக ஆகியது. ? இத்தனைக்கும் இந்த ஜாதியிலும் ஒரு சிறு பகுதியினரே கடவுள் மதம் சம்பந்த பட்ட தொழிலின் அடையாளமாக இதை வைத்துள்ளனர். ஆனால் இந்த குறியீடு எப்படி மாறிவிட்டது என்று பாருங்கள் ? \
மேலும் பரங்கி மலையில் (சென்னை ) உள்ள தேவாலயத்தில் ஒரு சித்திரம் உண்டு. அதில் ஒரு கிறிஸ்துவ மத குருவை ஒரு குடுமி வைத்த கருப்பு மனிதன் வேலால் குத்தி கொல்வதை போன்ற வரையப் பட்டிருக்கும். இந்த ஓவியம் 1940 அல்லது 50 களில் வரையப் பட்டிருக்கலாம். இதன் பின்னணிதான் சுவாரசியம். இந்த மத குரு 1000 வருடங்களுக்கு முன்பு வந்து இங்கு பிராத்தனை செய்த போது ஒரு இந்து வெறியனால் குத்தி கொள்ளப்பட்டாராம். அவருடைய சமாதி இங்கு இருக்கிறதாம். இது உண்மையா பொய்யா என்பதை விடுங்கள். அது வேறு விஷயம். இதில் காமெடி என்னவென்றால் ...இன்று இந்த ஓவியத்தை காண்பவர்கள் அல்லது அதைப் பற்றி சொல்பவர்கள் அந்த ஓவியத்தில் ஒரு பார்பனன் கிறிஸ்துவ குருவை கொன்றதற்கான சாட்சி என்கிறார்கள். பார்பனன் என்பதற்கான அடையாளம் அந்த குடுமியாம். எப்படி கதைகள் மெல்ல மெல்ல திரிக்கப்படுகின்றன. பாருங்கள். கொலை நடந்ததாக சொல்லப்படுவதே உண்மையா பொய்யா என்று தெரியாத கதையில் இதில் யார் கொலை செய்தார்கள் அவர்கள் என்ன ஜாதி என்பதை இன்று உள்ள நாகரீகத்தின் அடிப்படையில் கதை சொல்லி திரிக்கிறார்கள்.

 தங்கள் பிரசாரத்திற்கு பயன் தரும் வகையில் எந்த ஒரு கதையையும் தங்கள் வசதிக்கேற்ப திரித்து சொல்வது கட்சி அரசியலில் மட்டுமல்ல மத அரசியலிலும் உண்டு. இதையும் சிந்திக்காத சாமான்யர்கள் வாயை பிளந்து கொண்டு கேட்டு பின்னாளில் ஆமாம் அந்தணன் கொன்றான் என்று சொல்லி போவார்கள். காட்சி திரிபுக்கு இதூ ஒரு உதாரணமே.. (இதெல்லாம் சொன்னதற்காக கிறிஸ்துவ விசுவாசிகளும், மத சார்பற்ற சக்திகளும் என்னை பார்பனன், காவி , ஹிந்து வெறியன் என்று தூற்றுவீர்கள் என்று நம்புகிறேன் .பரவாயில்லை...அது உங்கள் எண்ணம். இதில் நான் சொல்ல ஏதுமில்லை ) 

 எதிர்க்க துணிவில்லாத ஒரு சமுகத்தை அடிப்பதில் ஒரு வசதி உண்டு. உங்களுக்கு ஆள் சேர்க்க வேண்டிய செலவு இல்லை. காற்றிலே கத்தி வீசலாம். யாரும் கேட்க மாட்டார்கள். மூடர்கள் உங்களை வீராதி வீரன் என்று வர்ணிப்பார்கள். பொய்யை சரித்திரம் என்று சொல்லலாம். கேட்பவர் சரித்திரமே படிக்கவில்லை. அதை தேடவும் எத்தனிப்பதில்லை என்பது வசதிதானே. அப்படியே எவனாவது எழுந்தால் அவன் பார்பன அடிவருடி என்று அடித்தால் போதும் ஒய்ந்துவிடுவான். இன்று இந்த சமுதாய போட்டியில் பரிசுகள் ஏராளம். போட்டிகளும் ஏராளம். மதம் இனம் என்று அதிகமாக பிரித்து அனைத்திலும் இந்தியனில் இருந்து வெள்ளையன் (மீண்டும் ) வரை எல்லோரும் இங்கு தங்களின் கொள்ளையை நிலை நிறுத்த போராடுகின்றனர். அதற்கு வசதியாக திட்டுவதற்கு அல்லது திசை திருப்ப ஆள் வேண்டுமே ? இதன் முன்னணியில் இருப்பது இடது சாரிகளே...தங்கள் தோல்வியை யார் மீதாவது எதன் மீதாவது ஏற்றியே பழக்கப்பட்ட இவர்கள் இன்று அதை இப்படியும் செய்கின்றனர். 

 அந்நிய சிந்தனைகளின் இடைச்செருகல் இன்றி நாம் இந்த ஏற்றத்தாழ்வுகளை சரியாக கையாண்டு இருப்போமா என்பவர்களுக்கான பதில் ஒன்றே... மாறிக் கொண்டிருந்த உலகில் 17ம, நூற்றாண்டுகளுக்கு பிறகு அந்நிய தலையீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் இந்தியா என்று ஒரு ஒற்றை நாடாக இருந்திருப்போமோ இல்லையோ இந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு நிச்சயமாக நம் கலாசாரத்திலேயே ஒரு நல்ல தீர்வு கண்டிருப்போமோ என்றே தோன்றுகிறது. காரணம் இன்று வெளியில் இருந்து வந்த மதத்தாலும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முடியவில்லை. தீர்வு நம் கலாசாரத்தில் தான் உள்ளது என்றே தோன்றுகிறது. புத்தனையும், மகா வீரரையும், ஆதி சங்ககரரையும், விவேகானந்தரையும் ராம கிருஷ்ண பரம அம்சரையும் தந்த இந்த கலாசாரம் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு தராமாலா போகும்.???? ஆக இந்திய சமுதாயத்தில் பிள்ளையார் படிக்க குரங்காகி போன சாதி விஷயத்தில் பெரும்பாலோர் தெரிந்தோ தெரியாமலோ சுயநலத்தில் அடிப்படையில் தவறிழைத்தவர்களே!! இதில் ஒரு சமுகத்தின் மீது மட்டும் பழியை சுமத்தி தப்பிக்க நினைப்பது இயலாது என்று சரித்திரம் நமக்கு தொடர்ந்து சொல்லித்தரும் பாடம். அது தவறான செயலும் கூட.... இன்று 1000 வருடங்கள் முன்பு ராஜானுஜர் தொடங்கியது போலசமுதாய மறுமலர்ச்சிக்கு எல்லோரும் முன் வர வேண்டும். ஒரு காலத்தில் செழிதொங்கியதாக சொல்லப்படும் இந்திய தமிழக கலாசாரம் அதை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அதை வெறுப்பின் அடிப்படையில் செய்ய இயலாது. அன்பின் அடிப்படையில் எல்லோரையும் அரவணைத்தே சமமாக பாவித்தே இதை செய்ய வேண்டும். இதற்கு இடையூறு உள்ளிருந்தும் வெளியிருந்தும் நிச்சயம் ஏற்படும். அதை நாம் ஒருங்கிணைந்தே எதிர்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் எல்லோரும் தங்கள் நிறங்களை மறைக்க துணிந்ததில்லை. இன்று எல்லோரும் எல்லா நிறங்களிலும் வருகின்றனர். வேட்டை பழையது. காடு பழையது . ஆனால் வேட்டையாலர்களின் உத்தி மாறிவிட்டது.