Wednesday, December 20, 2017

2017 சென்னை விஜயம். சில அனுபவங்கள்!

இது அரசியல் பதிவு அல்ல  
சொர்கமே என்றாலும் எங்கூரு போலாகுமா என்று நெஞ்சை நிமிர்த்தி சண்டை போட வருபவர்கள் படிக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தடையில்லை.
படாத பாடு படுவேனோ என்று பயந்து கொண்டே வந்த அளவுக்கு இல்லை. கொஞ்சம் ரசிக்கவே செய்தேன்.
பயத்தின் காரணம்..என்னிடம் ஆதார் இல்லை.
புது பணம் இல்லை. இப்படி பல இல்லைகள். பின் எப்படி கடைத்தேறுவது என்கிற பயம்தான்.
குடியேற்ற துறை அதிகாரிகள் மிகவும் வேகமாகவும் திறமையாகவும் செயல்படுகிறார்கள்.
வருடா வருடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
நிறைய தமிழர் அல்லாதவர்களும் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டு வெள்ளைக்காரர்களை கண்டு பம்முவதில்லை.
எல்லாம் தெரியும். நில்லுடா ..என்று ஒரு கெத்து தெரிகிறது. இது ஒரு 20 வருடம் முன்பு கம்மி.
சுமார் 15 வருடங்களுக்கு முன் வரும் போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விட்டு வெளியே வர எப்படி என் வாடகை வண்டி கஷ்டப்பட்டதோ அதே நிலைமைதான் இன்றும்!
காரணம்தான் வேறு..அன்று விமானநிலைய விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டுதல்..இன்று மெட்ரோ ரயில். வருடா வருடம் வந்தாலும் இந்த நுழைவாயிலேயே நம்மை நோக அடிப்பார்கள.
கண்ணா..இது சும்மா trailer தான். மெயின் picture இனிமேதான் என்பது போல் இருக்கிறது.
இந்த முறை நான் ஆட்டோகாரரின் வாயில் விழுந்து புறப்பட வில்லை. நன்றி...உபர்..மற்றும் ஓலா..
மிகக்குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம்.
என் வாழ்நாளில் 45 வருடத்தில் கடைசியாக அந்த மாயாஜாலம் நிகழ்ந்தே விட்டது. எந்த அரசாலும், கருணாவோ, எம்.ஜி.ஆரோ ஜெயா வோ செய்ய முடியாததை டெக்னாலஜி சாதித்தது. இந்த ஆட்டோ என்னும் கொள்ளையர்களிடம் இருந்து என்னை போன்று இந்த சென்னை மக்களை காப்பாற்றியது.
சும்மா போய் கல்கண்டு வாங்குவதை போல் சிம் கார்டு வாங்க முடியவில்லை. காரணம் என்னிடம் ஆதார் கார்டு இல்லை. நான் என் பாஸ்போர்டை காட்டியும் வேலைக்கு ஆகவில்லை. ஆதார்ணா..ஆதார்தான்.
ஆபிசர் ஸ்ட்ரிக்ட் டு..ஸ்ட்ரிக்ட் டு...என்று விவேக் மாதிரி எதிரொலித்தார்.
சிவப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல், சிவப்பா இருப்பவன் ஏமாறுவான் என்று என் மூஞ்சியில் எழுதியிருந்தது போலிருக்கு. ஆதார் கார்டுக்கு கட்டணம் என்று எங்கள் இரண்டு பேருக்கு தலா 250 ரூபாய் வாங்கி கொண்டார். சரி..என்று கொடுத்துவிட்டு போட்டோ வெல்லாம் எடுத்த பிறகு பணத்திற்கு ரசீது கேட்டேன். அப்ப பார்த்தாங்க பாருங்க ஒரு பார்வை.. மூஞ்சியில் துப்பாத குறைதான். சண்டை போட்டு என்ன பயன்?? முதலை வாயில் போனது என்னைக்கு திரும்பியிருக்கு?
டிஜிடல் இந்தியா இன்னும் வெகு தொலைவில்தான். நான் இருந்த 60 நாட்களும் எல்லா சில்லறை செலவுகளும் பணம் கொண்டே செலவிட்டேன்.
எங்கும் என்னை கார்டு கொடுங்க என்று வற்புறுத்த வில்லை. நகர அளவில் பெரிய செலவுகள் எல்லாம் மக்கள் இயல்பாக கார்டுகளில் செலவு செய்ய தொடங்கி விட்டனர். அது மளிகை கடையோ (மாதாந்திர ) இல்லை துணி கடையோ கார்டுதான்.
வியாபாரம் வேண்டும் என்பவர்கள் கார்டுக்கு தனியாக சார்ஜ் செய்வதில்லை. பெட்ரோல் போடும் இடம் போன்ற மக்கள் தவிர்க்க முடியாத இடங்களில் தான் இந்த சார்ஜ் எனும் அநியாய கொள்ளை நடக்கிறது. இதை அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் நிறுத்த முடியும்.
டிஜிடல் இந்தியாவை பற்றி பேசும் போது ஒரு காமெடி கண்டேன். R.K.நகர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பஜக வேட்பாளர் கரு.நாகராஜனே தன் டெபாசிட்டை (Rs.10,000/-) பணமாத்தான் கட்டியதை தொலைகாட்சியில் கண்டேன். சிரிப்பு வந்தது. ஒரு அரசு அமைப்பே டிஜிடல் இந்தியாவிற்கு தயாராகாத போது பொதுமக்கள் எப்படி ????
சென்னையின் சாலைகளை பாராட்ட வேண்டியோ என்னவோ நான் ஒரு முறை ஹைதிராபாத் சென்று வந்தேன். சென்னையை விட அதிகமான வாகனங்களும் மோசமான டிரைவர்களையும் படு மோசமான சாலைகளையும் கொண்டது என்று ஹைதிராபாத் பெருமை கொள்ளலாம்.
பங்களூர் வாகன நெரிசலில் சென்னைக்கும் ஹைதிராபாத்துக்கும் சவால் விடுகிறது.
ஆக மொத்தம் பெருநகரங்கள் நரகங்கள் தான்.
(ஒரு வேளை நான் பார்த்த இடங்கள் அப்படியோ !)
இன்னமும் சென்னையில் ஒருவர் வெறும் 100 ரூபாயில் உண்டு உயிர் வாழ முடிகிறது என்பது வியப்பே ! (இது வீட்டு வாடகை இல்லாமல் !) அம்மா கேண்டின், மற்றும் சில மெஸ்கள் இந்த புண்ணியத்தை தேடி கொள்கின்றன.
ரயில் டிக்கெட்டுக்கு மக்கள் பெரிதும் அலட்டி கொள்வதில்லை. அடிதடிக்கும் போவதில்லை. நன்றி..RAIL APPS. இது பலரின் சிரமத்தை குறைத்து பயணத்தை எளிதாக்குகிறது. TTR க்கு வருமானம் குறைந்திருக்கலாம். ஆனால் இன்னமும் மக்களில் 30 சதவிகிததில் இருக்கும் பரம ஏழைகளுக்கு அவசியமான இரண்டாம் வகுப்புகள் மற்றும் சாதா ரயில்கள் குறைந்துவிட்டது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் இன்னமும் இந்த ஹைவே கொள்ளயர்கலான தனியார் பேருந்துகள் மற்றும் எதற்குமே உதவாத அரசு பேருந்துகளை நம்பித்தான் இருக்கிறார்கள். பாவம்.
நகர பேருந்துகள் இன்னமும் சாலையில் ஓடுவது ஒரு வியப்பே..அதை இயக்கும் டிரைவர்கள் இன்னமும் பாவம்!!. டிக்கெட் கொடுக்க புத்தம் புதிய டெக்னோலாஜி கொண்ட மெசின். ஆனால் அந்த நடத்துனருக்கு உட்கார உடைந்த சீட். !! துருபிடித்த கம்பிகள் எங்கும் நம்மை கிழித்துவிடுமோ என்கிற உதறலுடன் பயணம். இதில் பயணம் செய்ய ஒரு ஜென் நிலை தேவைப்படுகிறது.
நெடுஞ்சாலை "டோல்" கொள்ளை எப்போதும் போல் உள்ளது. "சார்..இந்த toll காலம் முடிஞ்சு பல வருஷமாச்சு..தெரியுமா" என்று சொல்லி கொண்டே காசு கொடுத்து சென்றார் ஒருவர். அந்த toll செங்கல்பட்டு வெளிப்புற சாலையில் இருக்கிறது.
எதற்கும் கவலைப் படாமல் ஜனங்கள் போத்திசிலும் சரவணா ஸ்டோர் லிம் வாங்கி குவித்து கொண்டே இருக்கின்றனர். நான் நுழைந்த எல்லோர் வீட்டிலும் வேண்டா பொருள்கள் என்று அவர்கள் தூக்கி போட்டவைகளே ஒரு வண்டி கொள்ளும். வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 5 எலக்ட்ரோனிக்ஸ் பொருள்கள். (mobile, tab etc )
இது சிறு நகரங்களிலும் குறைவில்லை. இந்த பழைய பொருள்களின் பாட்டரிகளை எப்படி கையாள போகிறார்கள் என்று பயம் மேலிடுகிறது.
பாடியிலும், போரூரிலும் வாகன நிறுத்துங்களே இன்றி 7 மாடிகள் வணிக மையம் அமைத்து சாலைகளை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். அடேங்கப்பா...என்ன கூட்டம் என்று வியந்து மக்கள் குவிகிறார்கள். ஒருவேளை இந்த ஸ்தம்பிக்க வைத்ததே அதற்காக தானோ.!
எல்லோரிடமும் காசு சரளமாக விளையாடுது.!
ஒரு ரூபாய்/50 காசு சில்லைரையை திருப்பி கேட்டால் வெளி உலக ஜந்துவை பார்ப்பது போல் பார்கிறார்கள்.
30 அடி அகலமே கொண்ட எங்கள் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலை 1.75 கோடி!!
சென்ற ஆண்டு மழையில் இந்த குடியிருப்பின் கீழ்தளம் முழுகியது.
மின்சாரம் பல நேரங்களில் ஜெனரேட்டரில் இயங்குகிறது.
இந்த குடியிருப்பில் ஒருவரின் மாத "மெயின்டனஸ்" கட்டணம் 3000 ரூபாய். அப்படியும் குடிக்க தண்ணீரை விலைக்குத்தான் பாட்டிலில் வாங்கி குடிக்கிறார்கள்
இத்தனை இடஞ்சலில் இந்த குடியிருப்பில் வாழ வங்கியில் கடன் வாங்கி மாதம் குறைந்த பட்சம் 75 ஆயிரம் EMI செலுத்துபவரை பார்த்து பரிதாப படவே தோன்றுகிறது.
இந்தியாவில் மக்கள் பணக்காரர்களாகி விட்டார்கள். ஆனால் பணக்காரர்களுக்கான வாழ்வை இன்னும் வாழவில்லை.
PEOPLE EXIST HERE. THEY DON'T LIVE.
In fact, many people don't even know what is difference between existence and living.
என் இளமைகாலம் இத்தனை குழப்பங்கள், மன அழுத்தங்கள் நிறைந்திருக்க வில்லை என்கிற மட்டில் மகிழ்ச்சி.
நான் இன்று வெறும் பார்வையாளனாக...
கடவுளுக்கு நன்றி.
Ravi Sundaram