Thursday, October 05, 2017

தமிழ் இனம் ???

தமிழ் :-
(பெரிய பதிவு – பொறுமையில்லாதவர்கள் தாண்டி போங்கள்)

நான் எழுப்பும் சில கேள்விகள் சில தமிழருக்கு பிடிக்காமல் போகலாம்.
ஆனால் உண்மையில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டே ஆக வேண்டும்.
பல ஊடகங்கள் இந்த அடிப்படை கேள்விகளை தவிர்த்து செல்கின்றன என்பது வருத்தத்திற்குரியது. நாம் கேட்போம்.

இன்றைய சூழலில் ஒரு இனம் என்பதன் வரையறை என்ன?  மொழியா? நிறமா? வசிக்கும் இடமா? வழிபடும் இறையா? வழிபாட்டு முறையா? இல்லை பெருமிதம் கொள்ளும் சாதியா?  எது ஒரு இனத்தை தீர்மானிக்கிறது.

மொழிதான் என்றால் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு முதல் மொழியாக பேசம் அனைத்து நாட்டு மக்களும் ஆங்கிலேயர்கள் அல்லது பிரெஞ்சுகாரர்கள் ஆகி விடுவார்களா?  அமெரிக்காவிலும், கனடாவிலும், காமருன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரஞ்சு முதல் மொழியாக பேசம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவர்களும் ஒன்றா? இது போன்ற கேள்விகள் அமேரிக்கா முதல் ஆந்திரா வரை வைக்கலாம்.
இலங்கையில் தமிழில் பேசும் இசுலாமியர் தங்களை தமிழர் என்று முன்னிறுத்துவதில்லை.  

நிறம் அல்லது வசிக்கும் இடம்தான் என்றால் எல்லா வெள்ளை தோல்காரனும் ஐரோப்பியாவில் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று இல்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஒன்றாக வாழ முடியாது என்று தவிர்க்கின்றனர்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து கருப்புறரும் ஒரே இனத்தவரா என்றால் அங்கும் இல்லை என்றே சொல்கின்றனர். டுட்சி, ஹூட்டு மற்றும் மசாய்-மாரா என்று பல்வேறு இனக் குழுக்கள் இருக்கின்றன.
1994ம வருடம் வெறும் 100 நாட்களில் சுமார் 10 லட்சம் மக்கள் இரண்டு இன குழுக்களிடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். இதில் மிதவாத ஹூட்டுகள் 2 லட்சம்.  மீதம் டுட்சிக்கள். இத்தகைய படுகொலைகளை வெள்ளையன் கூட கருப்பர்கள் மீது செலுத்தவில்லை.

அடுத்து வழிபடும் இறையா என்றால் அங்கும் சிக்கல். இஸ்லாமியர்கள் எல்லா இஸ்லாமியரையும் தங்கள் இனமாக கொள்வதில்லை. அரபிநாடுகள் எல்லாம் இதற்கு உதாரணங்கள். கிறிஸ்துவ நாடுகள் எல்லாம் இதற்கு இன்னோர் உதாரணங்கள். பௌத்தமும் அப்படித்தான்.
ஆக வணங்கும் இறையும் இனத்தை குறிக்காது..

சாதியா என்றால் நிச்சயமாக இல்லை என்று இன்று நடக்கும் சாதி சண்டையை கண்டாலே விளங்குகிறது.

ஆக இனம் என்று இன்று ஒன்றை முன்னிறுத்த முடியாது. அது வழக்கொழிந்து போன ஒரு அடையாள படுத்தும் முறை.

இனத்தின் அடிப்படையில் இன்று ஒன்று சேருங்கள் என்று சொல்வது மிகவும் அபத்தம். இது ஆகாத காரியம்.

ஆஹா. அப்படியெல்லாம் கிடையாது. தமிழர் என்றொரு இனம் உண்டு. அவர்க்கு தனியே ஒரு காரம், மணம் குணம் உண்டு என்று சொல்வீர்களானால் கீழ கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1.       ஒரு இந்திய தமிழனோ, மலேசிய தமிழனோ இலங்கையில் ஈழத்தமிழனுக்கு தலைமை ஏற்க முடியுமா?  பலகாலம் ஈழத்தமிழருக்காக பேசிய நெடுமாறன ஐயா கூட போக முடியாது..
2.       அட..அதை விடுங்கள்..ஒரு மலையக தமிழன் யாழ்ப்பாண தமிழனுக்கு தலைமை ஏற்க விடுவார்களா?  அல்லது யாழ்ப்பாண தமிழர்தான் மலையக தமிழருக்கு தலைமை ஏற்க முடியுமா?
ஐரோப்பா வந்து பாருங்கள். திரிகோண மலை தமிழனை ஒரு யாழ்பான தமிழன் மதிப்பதில்லை.
3.       மலேசியாவில் பிறந்து அங்கு அமைச்சரான டத்தோ சாமி வேலு போன்றவர்களை தமிழகம் முதலமைச்சராக ஏற்குமா ?
4.       அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இரண்டு தமிழர்கள் இணைத்து பேசிக் கொண்டால் முதலில் கேட்கும் கேள்வி...நீங்கள் எந்த ஊர்?
உங்கள் ஊரை சொன்னதுமே ஓரளவு உங்கள் ஜாதியும் கணிக்கப் பட்டுவிடும். இந்திய தமிழன் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் உடனே இலங்கை தமிழன் ஒரு இடைவேளியுடனே பேசுவார்.
சினிமாவும், வணங்கும் கடவுள்கள் மட்டுமே உங்களையும் அவர்களையும் இணைப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.  இப்பவும் உங்க விஜய் , உங்க ரஜினி உங்க கமல் என்றுதான பேசுவார்கள்.
இந்திய தமிழன் என்றாலே இனமானம் அற்றவன் என்கிற ஒரு கிழ்நோக்கு பார்வை மட்டுமே உண்டு. குறிப்பாக யாழ் தமிழர்கள் இடையே ..
உரிமைக்காக போராடி உயிர் துறக்க துணிந்த வீரர்கள் தாங்கள் என்கிற பெருமிதம் உண்டு அவர்களிடையே....தவறில்லை. அது அவர்களின் அனுபவம்.

இத்தனைக்கும் ஈழ போராட்டத்தில் இந்திய தமிழ் மக்கள் பல் வேறு விதத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கிடையே ஈழத்தமிழர்களுக்கு பேருதவி செய்தவர்கள். உணவு ஊட்டிய கைகளை கடித்த சம்பங்கள் நிறைய உண்டு. (நான் ராஜீவ் கொலையை சொல்லவில்லை!). அப்படியிருந்தும் இன்றும் ஈழத்தமிழர்களுக்கு நம் மக்கள் உதவி செய்ய மறுக்க மாட்டார்கள்.  ஈழத்தில் நிகழ்ந்த சோகத்திற்கு நம் இந்திய தமிழர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. அது மனிதாபிமான அடிப்படையில் நியாயமும் கூட...
நடந்த சோகத்தில கொண்ட கோபத்தில் இந்தியாவை உடைப்போம் என்று ஒரு சிலர் பின்புலம் இருந்து இயக்குவது தவறு. தமிழர் என்கிற எம் இனத்திற்காக ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்பது மகா அபத்தம்.

இனமானம் என்று உணர்ச்சி தூண்டி பேசி இன்னொரு தலைமுறையை காவு குடுக்காதீர்கள் என்றே இறைஞ்சுகிறேன்.  

அவரவர் இருக்கும் நாட்டில் நேர்மையாக நியாயமாக நாட்டு பற்றுடன் இருங்கள்.

இதற்காக என்னை தமிழ் துரோகி என்று திட்ட முயலுமுன் என் கேள்விகளை சிந்தியுங்கள்.


நன்றி. 

தமிழ் செய்தி ஊடகங்கள்.

தமிழக தொ(ல்)லை காட்சிகள்:-


இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு வியாதி உண்டு.
அதாவது எவனாவது ஒரு காரியம் செஞ்சு அது கொஞ்சம் பிரபலம் ஆயிட்டுசுன்னா உடனே எல்லோரும் ஒட்டு மொத்தமா அதே போல் பண்ண முயற்சி பண்றது. அது முதலாவது போல் இல்லாமல் கன்றாவியா இருந்தாலும் விடாது செய்வார்கள. மாத்தி யோசிக்கவே மாட்டானுங்க.


90 களில் சரவணபவன் வந்த வெற்றி கண்டவுடன் உடனே கணேஷ் பவன், காமாட்சி பவன் என்று எல்லோரும் அதே போன்ற நீல நிற போர்டு வைத்தது மட்டுமல்லாது "உயர்தர சைவ உணவகம்" என்று போட்டுக்கிட்டு வாழை இலை வைத்து தொழில் பண்ணினார்கள். சாப்பாடு என்னவோ கண்றாவிதான். இதை COPY CAT SYNDROME என்று சொல்வார்கள்.


இதே கூத்துதான் இந்த தொலைகாட்சிகளிலும் !!
அரட்டை அரங்கம் என்று விசு செய்தாரா? விடாதே!
அதே போல் இன்னொரு கூட்டத்தை கூட்டி இன்னும் அபத்த களஞ்சியமாக பேசி கைதட்டல் வாங்க பாரு.
அது பாஷ்கரராஜா இருந்தாலும் சரி பாக்கியராஜாக இருந்தாலும் சரி..இல்லை நம்ம தாடிக்காரராக இருந்தாலும் சரி..விடாதே..இதுல லியோனி மாதிரி பைத்தியங்கள் பாட்டு வேறு பாடி கடுப்பேத்துவார்கள். பண்டிகை திருநாள் வந்தா போதும் இவனுங்க தொல்லை தாங்காது.


இப்ப செய்தி தொலைகாட்சிளின் கூத்து இன்னும் அதிகம். இவர்கள் தினம் ஒரு நாலு பேரை கூட்டி வைச்சுக்கிட்டு பண்ற கொடுமைய எங்க சொல்ல?
ஆயுத எழுத்து, நேர்பட பேசு, வியுகம்  என்று பல கூத்துகள். இதில் தினமும் ஒரு மொக்கை, குடிகாரன் என்று எல்லோரையும் கூப்பிட்டு நேர்காணல் வேறு. கேள்விக்கு என்ன பதிலாம்.? நாலு பேர் பார்க்கும் போது “பப்ரபா” என்று உட்காருகிறோமே என்று கூட தெரியாமல் வாயில் வந்ததை உளரும் இந்த தற்குறியை எல்லாம் பேட்டி எடுத்து அவனுக்கு ஒரு பிரபலம் உண்டாக்கி தருகிறோமே என்று கூட புரியாது முட்டாள் கூட்டம். அத்தனை விளம்பர வெறியா? TRP RATING அத்தனை முக்கியமா?  அட பக்கிகளே...இது உங்கள் தரத்தை கீழே இழுத்து செல்லும் என்று தெரியாதா?

அந்தி சாய்ந்தால் கை கால் அரித்து உதறல் எடுக்கும் குடிகாரன்கள் போல் ஆகிவிட்டனர் இந்த தொலைகாட்சியினர்?  எவனாவது நாலு பேரை கொண்டு வந்து உட்கார வைத்து “அம்மா..இட்லி சாப்டாங்களா ? இல்லையா? “ என்று பரபரன்னு ஒடறாமாதிரி வேஷம் கட்றாங்க.  அதிமுக கூட்டம்..ஆவடி குமார், சரஸ்வதி, வளர்மதி அல்லது இன்னும் பெயர் தெரியாத கூச்சல் போடும் கூட்டம். திமுக வில் இப்போது சில புதுமுகங்கள் இறக்குராங்க. இவங்க தங்கள் கட்சியின் சரித்திரமே தெரியாமல் பேசுவாங்க!
காங்கிரசில் பேச கூட ஆள் கிடையாது. இல்லைன்னா விஜயதாரிணி மாதிரி ஆளெல்லாம் வருமா?  இருப்பதிலேயே பா.ஜ.க தான் காதை கிழிக்கிறாங்க.
ஏய்யா!  கத்தறிங்க? எதிரே கேள்வி கேட்பவன் ஏற்கனவே உங்களை வெறுப்பேத்துவது என்று முடிவு பண்ணித்தான் கூப்பிடறான். பின்ன ஏன் வந்து கத்தி கடுப்பெத்தறிங்க? என்ன கேட்டா...நீங்க பேசாமல் இருந்தாலே இவனுங்க பண்ற கூத்தில் நாலு ஒட்டு உங்களுக்கு கூட கிடைக்கும். போய் கட்சியை அடிப்படை அளவில் வளர்க்க பாருங்கள்.


கூத்தில் கோமாளிகள் மாதிரி சிறந்த பத்திரிக்கையாளர்கள் என்று சில மொன்னைகள் வேறு வந்து குட்டையை குழப்புவார்கள். உண்மையில் இந்த பத்திரிக்கைகார்கள்தான் நம்மை படுகுழியில் தள்ளியவர்கள். எதை மக்களுக்கு சொல்லவேண்டும். எதை சொல்லக்கூடாது என்று இவர்கள் முடிவு செய்வார்களாம். ஜெயா உயிருடன் இருந்தவரை (அப்போலோவில் 75 நாள் இருந்தது உட்பட) நவத்துவாரங்க்களை அடைத்து கொண்டு இல்லையேல் “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி” என்று கேவலமாக எழுதி கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள்.

உண்மையில் மணிக்கொரு “பிரேக்கிங் நியுசோ” தினம் ஒரு பேட்டியோ, பொழுதுக்கு ஒரு விவாதமோ தேவையில்லை. வாரம் ஒரு முறை வரும் போதுதான் அதற்கு மதிப்பு கூடுதல். ஆளோ, பிரச்சனையோ சரியாக பின்புல ஆராய்ச்சி செய்து முழு விவரங்களுடன் எதிர் கொள்ளுங்கள். உங்களுக்கும் மரியாதை கிடைக்கும்.  விஜய் சிறந்த நடிகர் இல்லையா என்பது போன்ற மொண்ணை கேள்விகளை கேட்க மாட்டிர்கள்.

உதாரணத்துக்கு தினகரனை பேட்டி எடுக்கும் போது...அவர் என்ன படித்தார்? அவரது குடும்பத்திற்கு இத்தனை வருடத்தில் எப்படி இத்தனை சொத்துகள் வந்தது என்று ஒரு லிஸ்ட் தயார் பண்ணி கேட்க ஏன் தயங்குகிறீர்கள்? savukku தளத்தில் விவரம் ரெடியா இருக்கு! சித்தி ஜெயிலில் இருக்காங்களே..அவிங்க செய்த குற்றம் நியாயமா? உச்ச நீதி மன்றம் வரை சென்றீர்களே இது நியாயமா என்று ஏன் கேட்கவில்லை?  உதயநிதியை கூப்பிட்டு நீங்கள் செய்யும் தொழிலுக்கு முதலீடு ஏது என்று ஏன் கேட்பதில்லை?  ஸ்டாலினை அல்லது கனிமொழியை கூப்பிட்டு உங்கள் குடும்ப தொழில் எது உங்களுக்கு இத்தனை செல்வத்தை கொடுத்தது என்று ஏன் கேட்பதில்லை? அழகிரியை இன்னமும் நிறைய கேட்கலாம்? ஏன் இதையெல்லாம் செய்யவில்லை?

இதையெல்லாம் செய்வீர்கள் என்று நான் நம்பவில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியும் மதரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ நடத்தப்படுகிறது.

இதுல நடுவாம்! நிலையாம்!

துணிமணி, தங்கநகை, TMT விளம்பரங்களே உங்களு தேவை.
உண்மை அல்ல.!


கமல்ஹாசன்

கமலஹாசன் :-


இவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இனி இவரை இவரது நிலைப்பாட்டை கேள்வி கேட்கலாம்.


இவரது இன்றைய ஒற்றை கொள்கை ..ஊழல் ஒழிப்பு. இதில் எல்லோருக்கும் பெரிய மாற்று கருத்து இருக்காது. லஞ்சம் வாங்குபவர்களை தவிர..!!


மற்றபடி இவரது் செயல் திட்டங்களில் பிரச்சனைகளில் இவரது நிலைப்பாட்டை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.


யாரும் சரியாக ஆட்சி செய்யவில்லை என்பதனால் நானும் முதல்வராவேன் என்று இவர் உரிமை கோர வருகிறார். இதில் பெரிய தவறு இல்லை. இபிஸ் மற்றும் ஒபிஸ் ஆகியோர் யாருக்கு தொண்டு செய்து முதல்வர்கள் ஆனார்கள்?.

 ஸ்டாலின், அன்புமணி சீமான் போன்றோருக்கு இவர் பெரிய இடைஞ்சல். எந்த கட்சியும் சாராமல் இருக்கும் ஒரு 30 சதவிகித வாக்குகளை இவர் குறி வைக்கலாம். அது அடுத்தவருக்கு பெரும் பாதிப்பைதானே ஏற்படுத்தும் ?

கமலின் வருகை பற்றி தேசிய கட்சிகள் எதிர்வினையாற்ற கூட முடியாமல் இருட்டில் காரின் விளக்கு வெளிச்சத்தில் செய்வதறியாது நடுசாலையில் முழித்து கொண்டு உறைந்து போய் நிற்கும் முயலை போல் நிற்கின்றன.

பலன் என்ன என்று எல்லோருக்கும் தெரியும் ?  J
சில தீவிர பா.ஜ.க.வினர் இப்போதே கமலை எள்ளத் தொடங்கிவிட்டனர்.
பலன் என்னவோ பூஜ்யம் தான்!  எப்படியும் சட்னிதான். 


இவரின் "நிறம்" என்ன என்று அறிய முற்படுவதில்தான் இன்று பலர் யோசிக்கின்றனர்.

இவர் கருப்பு சட்டைகாரரா ?
இல்லை காவி சட்டை காராரா?
இல்லை வெள்ளை சட்டைகாரரா ?
இல்லை லுங்கி கட்டி வருவாரா ?


இப்படி இவரை வகைப்படுத்த பிரம்ம பிரயத்தனம் நடக்கிறது. இந்த குழப்பத்தை போக்க கமல் பேச்சு உதவவில்லை. காரணம் பேச்சு எளிமையாக இல்லை

ரஜினியிடம் வெறும் ஒரு பளபளப்பான புகழ் வெளிச்சம் மட்டுமே இருக்கும்.
கமலிடம் எப்போதும் ஒரு புத்திசாலித்தனம் கலந்த புகழ் இருக்கும்.இவரது ரசிகர்களும் தங்களின் நட்சத்திரம் ஒரு புத்திசாலி என்று பெருமை கொள்வார்கள்.

கமலின் இன்றைய அரசியல் எதிரிகளுக்கு இந்த புத்திசாலித்தனத்தின் மீது ஒரு பயம் இருக்கிறது.
“தெர்மோகோல்” மற்றும் “சோப்புநுரை” அளவுக்கு மூளை கொண்ட மந்தி(ரி) களை கொண்ட அதிமுக அரசு இந்த விருமாண்டி காளையை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை. கன்னாபின்னா என்று பேசுகிறது.

முதலில் இவர் சினிமாக்காரர். இவர் பேசக்கூடாது என்றது. ஜெயா என்ன சமுக சேவகியா என்றவுடன் அடங்கியது.
அடுத்து இவரது குடும்ப வாழ்க்கை சரியில்லை என்றது. ஜெயா முதல் செங்கோட்டையன் வரை இவிங்க குடும்ப வாழ்க்கை வாயை அடைக்கிறது.
இப்படி எந்த பக்கம் போனாலும் கேட்டை போட்டா பயபுள்ளக என்ன பண்ணும். ? முழிக்குதுங்க.

இதெல்லாம் தெரிந்துதான் திமுக இப்படியெல்லாம் மோதவில்லை. ஏன்னா...இவிங்க லட்சணம் நாடறியும். அதனால் அவர்கள் வழக்கப்படி எடுத்தவுடன் தமிழர் முறைப்படி "இடுப்புக்கு கீழே" ( தாக்க தொடங்குகின்றனர்.

கமல் பார்ப்பனர் ..
அஹா. அஹா. என்ன கண்டு பிடிப்பு.?
கமல் எந்த அளவு பார்ப்பனர் என்றால் ஜெயா எந்த அளவுக்கு பார்ப்பனரோ அந்த அளவுக்கு.!!!  இன்னும் சொல்லப்போனால் இவர் அதற்கும் வெகு தூரம்.

பிராமண சமுகத்தை விட்டு கமல் வெளியே வெகு காலம் முன்பே வெகு தூரம் வந்துவிட்டார். இவர் எங்களவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். ஜெயாவுக்கு அப்படித்தான் சிலர் சிலகாலம் சொல்லி கொண்டனர். ஆனால் உண்மையில் கமல் “நம்மவர்” ஆகி வெகு காலம் ஆகிவிட்டது. நம்பாதது உங்கள் இஷ்டம்.

இவரது பெற்றோர் சாதிதான் இவருக்கும் என்றால் ..
பெரியார் நாயக்கரே!
காமராஜர் நாடாரே !
அண்ணா முதலியாரே!
ஜெயா அய்யங்காரே!

கமலை ஜாதி பாட்டிலில் அடைக்க முயலாதீர்கள். இந்த பூதம் அங்கு அடங்காது. அந்த களத்தில் அவரை வீழ்த்த முடியாது.

கொள்கைகளிலும் செயல்பாட்டிலும் இவரை கருத்தியலால் மோதுங்கள்.
வெல்ல வாய்ப்புகள் அதிகம்.
இப்போதுதான் ஒரு புத்திசாலியை களத்தில் சந்திக்க போகிறீர்கள்.
ஆனால் அதற்கு உங்களிடம் சரக்கு இருக்க வேண்டும்.

இவர் நல்லவரா! கெட்டவரா.....! .....தெரியாது. 

ஆனால் முட்டாள் இல்லை.

எனவே ஆட்டம் சூடு பிடிக்கிறது.! 

#KAMAL_HASSAN