Monday, April 22, 2013

கொலையும் தண்டனையும் !


தமிழ் கூறும் நல்லுலகில் தினமும்தான் கொலை நடக்கிறது. இதில் என்ன அதிசயம் என்று கேட்காதீர்கள்.
இது ஒரு தாயின் நெடிய போராட்டத்தின் கதை. லண்டனில் நடந்த கதை.
1993 ஆம் வருடத்தின் ஒரு முன்னிரவில் நண்பனுடன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஸ்டீபன் லாரென்ஸ் என்கிற 19வயது இளஞ்ன் திடீர் என்று வந்த ஒரு கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறான். 

பணத்திற்காக இந்த கொலை நடந்திருந்தால் லண்டனில் நடக்கும் பல கொலைகளில் இதுவும் ஒன்றாக மறக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கொலை அந்த இளஞ்சனின் நிறத்திற்காக நடந்தது. கொல்லப்பட்டவன் ஒரு கறுப்பர். கொன்ற கும்பல் வெள்ளையர்கள். மேலும் இவர்கள் தாக்கும்போது கொடும் நிற வசவுகளை சொல்லி தாக்கினார்கள் என்று ஸ்டீபன் னுடன் இருந்த அவனது நண்பன் சொல்கிறார்.

1993ம வருடம் நடந்த கொலைக்கு இன்று என்ன விசேஷம் என்று கேளுங்கள். சென்ற ஆண்டுதான் அந்த கொலைக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
அன்றுதான் கொலையாளிகளில் இருவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. சுமார் 19வருடம் கழித்து இருவரும் தண்டிக்கப்படிருக்கின்றனர்.

ஏன் இத்தனை ஆண்டு கால தாமதம்? இதற்க்கு பதில் சொல்ல தெரியாமல் இன்று பிரிட்டிஷ் சமுகம் விழிக்கிறது.
ஆனால் நமக்கு தெரியும் அவர்களின் தர்ம சங்கடம்.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த கால தாமத்திற்கு இந்த சமுகத்தில் இருக்கும் நிற வெறி மனோநிலையே காரணம் என்று இவர்களுக்கே தெரியும். இது ஒரு நெருஞ்சி முள்ளாக இங்கிருக்கும் நடுநிலையாளருக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது.

கொலை நடந்த நாளிலுந்தே தொடர்ந்து லண்டன் போலீசார் (உலகபுகழ் பெற்ற !) இந்த கொலையில் அதிக அக்கறை காட்டாமலேயே இருந்தனர்.

காரணம் கொல்லப்பட்டவர் ஒரு கறுப்பர். கொன்றது (உள்ளூர் காரர்காளுக்கு தெரியும்!) ஒரு வெள்ளயர். .

பிறகு பத்திரிக்கைகள்  மற்றும் கறுப்பர் இனத்தவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வேண்டா வெறுப்பாக சிலரை கைது செய்து பின் அவர்களையும் விடுவித்துவிட்டது.

அன்றிலிருந்து ஸ்டீபனின் தாயார் போராட தொடங்கினார். தொடர்ந்து இவரது போராட்டம் சட்டரிதியாகவே இருந்தது.

இந்த நெடும் போராட்டத்தை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். காரணம் ஒரு பெண் அதுவும் பெரிய அளவில் பணமோ செல்வாக்கோ இல்லாத கறுப்பர் இனத்தை சேர்ந்த இவர்  நீதிக்காக சுமார் 19 வருடங்கள்
 போராடுகிறார். எத்தனை அறச்சீற்றம் இருக்க வேண்டும்.?

நாளையுடன் அந்த இளைஞ்ன் மறைந்து 20 ஆண்டுகள் முடிவடைகின்றது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. கொஞ்சகாலம் கூட இணைந்த போராடிய அந்த பெண்மணியின் கணவர் பிரிந்து விட்டார். முதுமை வந்து விட்டது. முழு நேரமும் இந்த போராட்டத்தில் இருந்ததனால் எத்தனையோ இழப்புக்கள்.

ஆனாலும் அந்த பெண்மணி நீதியின் மீது வைத்த நம்பிக்கை வியக்க வைக்கிறது.

இது போல் நம் நாட்டில் நடக்குமா?
சந்தேகம்தான். காரணம் இங்கு அந்த பெண்ணின் போராட்டத்திற்கு அதன் நேர்மைக்கு சமுகத்தின் ஒரு சாராரும், அந்த கொலை போன்று இன்னொன்று நிகழக் கூடாது என்று பத்திரிக்கைகளும் துணை நின்றன.

நாம் ஊரில் நடக்க கூடிய விஷயமா இது...??

அட போங்க சார். தமாஷ் பண்ணிக்கிட்டு என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

அது சரி..

நீதி நேர்மை என்று அதிகம் கூவும் நம்ம ஊரில் சத்தம்தான் பெரிதாக இருக்கு. சாதனை......!!!!!! இல்லவே இல்லை..

சத்தியமேவ ஜெயதே...!