Wednesday, July 14, 2010

போபால் விபத்தும் பிரிட்டிஷ் பெற்றோலியம் விபத்தும்!


1984ம் ஆண்டு போபால் நகரம் ஒரு பெரும் சோகத்தில் துயரத்திற்கு ஆட்பட்டது. அன்று இன்றுள்ளது போல் தொலைத் தொடர்பு வசதிகள் நாடு முழுவதும் பெருகவில்லை. இன்று உள்ளதைப் போன்று செயற்க்கை கோள் சார்ந்த தனியார் தொலைக் காட்சிகளும் இல்லை. எல்லா செய்திகளும் சற்றே கால தாமதமாகத்தான் கொஞ்சம் உண்மையும், நிறைய யூகங்களுடன் கசியத் தொடங்கும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் ஒரு அமெரிக்க கம்பெனியில் நிகழ்ந்த விபத்து இது. இந்த விபத்தில் சுமார் 15,000 மக்கள் உடனடியாகவும் மேலும் சுமார் 15,000 பேர் 3 மாதங்களுக்குள்ளாகவும் இறந்ததாக ஒரு கணக்கு உண்டு. வழக்கப்படி அரசின் கணக்குப் படி சுமார் 3000 பேர் மட்டும் இறந்ததாகக் கூறப்படுகிறது. மற்றப்படி அடுத்த வந்த காலகட்டங்களில் மேலும் சுமார் 5.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இன்றும் மூன்று தலைமுறைகளாக அங்குள்ள மக்கள் பல்வேறு வகைகளாக பாதிக்கப்பட்டு வருவதாக தன்னார்வுக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

சரி. இதற்கும் சமிபத்தில் (ஏப்ரல் 2010ல்) அமெரிக்க கடற்கரையில் (மெக்ஸிகோ வளைகுடாவில்) நிகழ்ந்த ஒரு எண்ணெய் கிணறு விபத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் நடந்த விபத்துக்களில் இல்லை.
அதை சம்பந்தப் பட்டவர்கள் கையாண்ட விதத்தில் இருக்கிறது விஷயம்.


இதிலிருந்து நாம் (அரசு, மற்றும் ஊடகங்கள் மற்றும் பொது மக்களாகிய)படிக்க வேண்டியவை நிறைய உண்டு. படிப்போமா இல்லையா என்பது நமது கேள்வி.

முதலில் விபத்தின் தன்மையை ஒப்பிடுவோம்.

போபாலில் நடந்த விபத்தை மெக்சிகோ வளைகுடா விபத்துடன் ஒப்பிட முடியாது. வேண்டுமானால் ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலுடன் இதை ஒப்பிடலாம். காரணம் யூனியன் கார்பைட் விபத்திற்கு முன்பும் பின்பும் உலகில் இது போன்று ஒரு தொழிற்சார்ந்த விபத்து ஏற்பட்டதில்லை. மோசமான் விதிமுறைகள் அல்லது விதிமுறைகளே இல்லாத நாடுகளில் கூட இது போன்ற பெரிய மனித உயிரிழப்பு நேரவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேன்டும்.

பீ. பி. விபத்தில் உயிரிழந்தவர்கள் 11 நபர்கள். போபால் விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 30000 (விவாததிற்குரிய) பேர்களுக்க்கு மேல்.

போபாலி உயிரிழந்த கால்நடைகள் சுமார் 5 லட்சத்திற்கும் மேல்.

பீ.பி விபத்து மற்றும் எண்ணெய் கசிவினால் உயிரிழந்ததாக சொல்லப்படும் கடல்வாழ் உயிரனங்கள் சுமார் 20 பறவைகள் மற்றும் 5 ஆமைகள். மீன்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதுவரை யாரும் அதை கணக்கெடுக்கவில்லை. கணக்கெடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை.

இப்படி ஒவ்வொரு தளத்திலும் இந்த இரு விபத்துக்களும் மலைக்கும் சிறு கல்லுக்குமான வித்தியாசம் போன்று உள்ளது. ஆனால்....

இது சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா எடுத்த அல்லது எடுக்கின்ற‌ நிலைப்பாடுகள் மலைக்க வைக்கின்றன.

போபால் விபத்தில் அமெரிக்கா முதலிம் மெளனமே சாதித்தது. இன்றும் அது இந்தியாவில் இந்தியர்களின் கவனக்குறைவால் நடந்த விபத்து என்றே சித்தரிக்கப்படுகிறது.

இது ஒரளவுக்கு உண்மையாக இருந்தாலும் இது சரியா?

இந்த விஷயத்தில் இந்தியாவும் (!) முதலில் மெளனமே சாதித்தாலும் பின்பு மெல்ல பேருக்காக கூவத் தொடங்கியது. இருந்தாலும் இன்று வரை இந்திய அரசாங்கம் இந்த விபத்திற்கு இந்திய தொழிலாளர்களின் அசிரித்தையான நடவடிக்கையே காரணம் என்று நம்புவதாகத்தான் தெரிகிறது. இது ஏறக்குறைய அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடேயாகும்.

அதே அமெரிக்கா இன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று பெயர் இருப்பதினாலேயே எண்ணெய் கசிவுக்கு காரணம் அந்த கம்பெனியும் அதை நடத்தும் நிர்வாகியும் (இவர் ஒரு பிரிட்டிஷ்காரர்) பொறுப்பு என்கின்ற விதத்தில் பிரசாரம் செய்கின்றது. உண்மையில் இந்த விபத்து நடந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் மற்றும் துணை குத்தகைக்கார கம்பெனிகள் எல்லாம் (ஹாலி பர்ட்டன் போன்ற)அமெரிக்க கம்பெனிகளே!ஆனால் சாமர்த்தியமாக விபத்து நடந்த காரணத்தை யாரும் கேள்வி கேட்காமல் அதற்கு பின்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறைபாடுகளுக்கு தாய் கம்பெனியான பிரிட்டிஷ் பெட்ரோலியமே காரணம் என்று கேட்டு மிரட்டுகின்றது அமெரிக்கா!

சரி!. இதுவும் ஒரு வாததிற்காக நியாயம் என்றே கொள்வோம். ஆனால் இதே வாதத்தை யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கும் ஏன் இந்த அமெரிக்கா செய்யவில்லை. அந்த சமயத்தில் மெளனம் காத்ததேன்?
பிறகு நடக்கும் கூத்தை பாருங்கள்.

விபத்து நடந்து 2 மாததில் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டவுடன் அமெரிக்க பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக கூக்குரல் இடத்தொடங்குகின்றன.

ஆனால் நமக்கு போபால் விபத்தில் அடிபடும் யூனியன் கார்பைட் ஒரு அமெரிக்க கம்பெனி என்பதே இன்னும் (26 வருடங்களுக்கு பிறகும்) பலருக்கு தெரியாது. இதில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களும் அடக்கம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல!. இன்னும் பலருக்கு விபத்து நடந்ததே தெரியாது. நன்றி நமது ஊடகங்கள்.!!

எண்ணெய் கசிவு ஏற்ப்பட்ட 3 மாதத்தில் அமெரிக்க செனட் சபையின் புலன் விசாரணைக்குழுவுக்கு முன்பு பிரிட்டிஷ் பெட்ரோலிய தலைவர் ஆஜர் படுத்தப்பட்டு கேள்வி கேட்கப்பட்டு வறுத்தெடுக்கப்படுகிறார். மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைக்கப் படுகிறார். இதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பி மக்களிடம் கொண்டு செல்கின்றன.

ஆனால் போபால் விபத்தில் யூனியன் கார்பைடின் அன்றைய இந்திய தலைவர் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விடுதலை செய்யப்படுகிறார். பின் அரசின் தனி விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து சொந்த நாடான அமெரிக்காவிற்கு தப்பி செல்கிறார்.இதற்கு அன்றைய மத்தியபிரதேச முதன் மந்திரியான அர்ஜுன்சிங்கும், மத்தியில் நரசிம்ம ராவும், ராஜிவ்காந்தியுமே காரணம் என்று இன்று சொல்கின்றனர். இன்றுவரை அந்த அமெரிக்கர் தேடப்படும் குற்றவாளியாகத்தான் இருக்கிறார்.

இந்த அவலத்தை அன்று எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லி இன்று தப்பிக்கலாம். ஆனால் உண்மை வேறானாது. உள்ளூர் மற்றும் தலை நகரை சேர்ந்த அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தெரிந்த விஷ்யம்தான் இது. என்ன கேவலம் பாருங்கள்?

சரி. இப்போது மிகப்பெரிய சுற்றுப்புற சூழல் விபத்திற்கு பின் (சுமார் 20 பறவைகளின் உயிரழப்பிற்குபின்!) அமெரிக்க அதிபர் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் இடைக்கால நிவாரணமாக
சுமார் 1 பில்லியன் டாலர்கள் (சுமார் 4500 கோடி ரூபாய்கள்) கேட்கிறார். எதற்கு? சுற்றுசூழல் சுத்திகரிப்பதற்கு, மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதற்கு மற்றும் சுற்றுலா துறையின் வீழ்ச்சியனால் பாதிக்கப்பட்டோருக்க்கு இடைக்கால இழப்பீடு வழங்க இந்த நிதி என்கிறார். இது இடைக்கால நிதிதான். முடிவில் சுமார் 20 பில்லியன் டால்ர்கள் (சுமார் ரூ 90,000 கோடி) வரை பிரிட்டிஷ் பெட்ரோலியம் தரவேண்டியிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இந்த எண்களும் மாறவாய்ப்புண்டு.

ஆனால் போபால் விபத்தில் நடந்த அநியாயத்தை பாருங்கள்.
விபத்து நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு மேலும் பலர் உயிர் இழந்ததிற்குப் பிறகு சுமார் ரூ.2500 கோடியை இந்திய அரசிற்கு தருவதற்கு யூனியன் கார்பைட நிறுவனம் ஒத்துக் கொண்டது. (அரசிடம் போன பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி போய் சேர்ந்தது என்பது தனி சோகக்கதை.) இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் அந்த யூனியன் கார்பைடுக்கு இந்தியாவில் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருந்தது என்பதாகும். இதை யாராவது கவனித்தார்களா? இல்லை.

என்னுடைய யூகம் அந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு இந்த 2500 கோடிகளை விட அதிகம் என்றே நினைக்கிறேன். உதாரணமாக சென்னை கிண்டியில் (தொழில் பேட்டையில்) இருந்த அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய நிலம் மற்றும் கட்டிடம் எப்படி யாரால் விற்கப்பட்டு இன்று அங்கு மிகப்பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்களின் அலுவலகமாக மாறியது என்று யாராவது ஆராய்ந்தால் விளங்கும்.
செய்தார்களா நமது அறிவு சார்ந்த ஊடகங்கள்?. இல்லையே!

கேள்வி கேட்டார்களா நமது செஞ்சட்டை தோழர்கள்!? இருந்தால் எம் மக்களுக்கு தெரிவிக்கலாம்.!!
இது போன்று அந்த யுனியன் கார்பைட் நிறுவனத்திற்கு சென்னை, டெல்லி, மும்பை, கல்கொத்தா என்று நாடு முழுவதும் பரந்து விரிந்த சொத்துக்கள் இருந்ததன. அந்த சொத்துக்களை விற்க முனையும் போது இந்த வழக்கு தடையாக இருந்த காரணத்தால் கொஞ்சம் வாய்க்கரிசி (2500 கோடி) போட்டு
கைக் கழுவி விட்டது அந்த கம்பெனி. இதில் யார் யார் லாபம் பார்த்தார்களோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்று அந்த யூனியன் கார்பைட் கம்பெனியை உலக அளவில் வாங்கி வியாபாரம் செய்வது "டொவ்" கெமிகல் என்னும் இன்னொரு அமெரிக்க கம்பெனி. இந்த கம்பெனி தனக்கும் போபால் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை ஆகவே தான் யாருக்கும் நட்ட ஈடு தர இயலாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. இவர்கள் இப்போது இந்தியாவில் கடை விரித்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அது வேறு கதை.

சரி நம்ம பிரச்சனைக்கு வருவோம்.
சுமார் 20 பறவைகளும் 2 ஆமைகளும் இறந்தற்கு சுமார் 4500 கோடி என்றால் 30000 மனிதர்களுக்கும் 5,00,000 கால் நடைகளுக்கும் எத்தனை கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று யோசித்து பாருங்கள்.

விபத்து நடந்து 3 மாத்திலேயே இப்படி கூத்தடிக்கும் அமெரிக்கா அன்று ஏன் மெளனம் சாத்தித்தது?

இதற்கெல்லாம் காரணம் நாமே!!

நம்மிடம் உளவியல்ரீதியாகவே பல்வேறு குறைப்பாடு இருப்பதாக எனக்குப் படுகிறது.நாம் நடத்தும் அரசு, நம் ஊடகம், நம் வியாபாரம் நம் தனிப்பட்ட வாழ்க்கை என்று பலவித்ததில் நாம் குறைப்பாடுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது உண்மை.

இந்த போபால் விபத்தை நாம் அணுகிய விதத்தை பகுதி 2ல் பார்ப்போம்.
.

3 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மக்களை சென்றடைய
இன்ட்லியில் இணைத்துவிட்டேன்..




//நாம் நடத்தும் அரசு, நம் ஊடகம், நம் வியாபாரம் நம் தனிப்பட்ட வாழ்க்கை என்று பலவித்ததில் நாம் குறைப்பாடுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது உண்மை.//

குறைபாடுகளை எதிர்க்க துணிவில்லாமல் இருக்கிறோம் நண்பரே...

வரதராஜலு .பூ said...

//நாம் குறைப்பாடுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது உண்மை//

குறைபாடில்லை நண்பரே, பேராசை. நாய்க்கு போடும் எலும்பை இதை வைத்து எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று போல நமது அதிகார வர்க்கம் நினைக்கிறது. அதற்குமேல் அவர்களுக்கு நினைப்பதற்கு எதுவுமேயில்லை. இதேதான் ஊடக விபச்சாரர்களின் எண்ணங்களும்.

பொன் மாலை பொழுது said...

நம்ம நாமே உணராமல் இருப்பதே ! அப்படி இருக்கச்செய்ய நாம் ஊரில் ஆயிரம் காரணிகள்.

படித்தவர்கள் - என்ற நிலையில் உள்ளவர்களுக்கே இந்த உணர்வு இல்லை என்றால் பாமரர்கள் நிறைந்த
நம் நாட்டில் போபால் போன்ற அவலங்கள் சர்வ சாதாரணம்.