Thursday, September 07, 2017

காவல்துறை

இன்று NEET எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல் முற்றுகிறது.

காவல்துறை :-

இவர்கள் ஒன்றும் ஆகாசத்தில் இருந்து வந்து குதித்துவிட வில்லை.
நம்மிடையே பிறந்து வளர்ந்து நம்முடனே வாழ்ந்து மடிய போகிறவர்கள்தாம் இவர்கள்.


ஆனால் பாருங்கள்...இவர்கள் மட்டும் விறைப்பாக தப்போ சரியோ அதிகாரிகள் அமைச்சுகள் சொன்னதை சிந்திக்காமல் செயல் பட பழக்கப்படுத்த படுகிறார்கள். அதற்கு இவர்கள் கடமை என்று பெருமிதம் வேறு கொல்கிறார்கள்.


இது அடிமைகள் நாட்டில் வெள்ளையன் அமைத்து கொடுத்த உளவியல் அடிமைத்தனம்.  சீருடை அணிந்து விட்டால் நீ பந்த பாசங்களை பார்க்க கூடாது என்று பழக்கப்படுத்தினர். சரி...நல்ல விஷ்யதான். பந்த பாசங்களை பார்க்க கூடாது.  ஆனால் நியாயம் அநியாயங்களை பார்க்க கூடாது என்று எவன் சொல்லி கொடுத்தான்.? தர்ம அதர்மங்களை பார்க்க கூடாது என்று சொல்லியது யார்?

உண்மையில் இந்த காவல் துறையினர் அதுவும் கடைநிலை இடைநிலை காவலர்கள் மிகவும் பரித்தாபத்திற்குரியவர்கள்.

வேலையில் சேரும் போதே முக்கால்வாசி பேர் கடன் வாங்கி காசு கொடுத்துதான் சேருகிறார்கள். இதில் முக்கால்வாசி பேர் பெரிய படிப்பும் படித்திருப்பதில்லை.  நல்ல படிப்பு படித்தவர்கள் இந்த கடைநிலை இடைநிலை காவல் வேலைகளுக்கு வருவதில்லை.

வேலைக்கு சேர்ந்தால் அரசு உத்தியோகம். சம்பளம் கிம்பளம் தாராளம். நிரந்தர பணி என்கிற சில அபத்த காரணங்களுக்காகவே பலரும் இதில் சேருகின்றனர். இன்னொரு மிக முக்கிய காரணம் கல்வியில் பெரிதாக சாதிக்க முடியாத பட்சத்தில் பலரும் வறுமையிலிருந்து தப்பிக்க இந்த வேலையில் சேர முனைகின்றனர்.

சேர்ந்த பிறகுதான் பணம் மட்டுமே வாழ்வு கிடையாது என்கிற நிதர்சனம் உறைக்கும்.  காரணங்கள் பல.
குறைந்த பட்சம் 12 மணி நேரமாவது தொடந்து பணி சம்பந்தப்பட்டு செலவிட வேண்டும். கேட்டால் இது 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய வேலை என்று தெரிந்துதானே சேர்ந்தாய்...என்பார்கள்.
யோசித்து பாருங்கள். காவல் நிலையத்தில் பாரா நிற்கும் ஒருவர் சுமார் 6 முதல் எட்டு மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும். இது தொடக்க நிலை வேலை. இதை தவிர சில விஷேசங்கள் VIP விசயங்கள், இப்படி “பாரா டுட்டி” க்கு சென்றால் சில இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. இயற்க்கை உபாதைகளுக்கு வழியே இல்லை. பெண் காவலர்கள் நிலை அதை விட மோசம். கண்ட இடத்தில் “சிப்” பை கழட்டி நிற்க முடியாது.

போக்குவரத்து காவலரின் நிலை அதை விட கொடுமை. கொளுத்தும் வெயிலில் மோசமான டிசல் பெட்ரோல் புகை நடுவே நாலு மணி நேரம் நின்று பாருங்கள். மூன்றாவது நாள் மருத்துவமனையே செல்வீர்கள்.

இது ஒரு சின்ன உதாரணம்தான். இன்னும் பல உண்டு.

மேலும் இன்று இந்தியாவில் காவல்துறை தங்களின் அடியாள் கூட்டமாகவே அரசியல்வாதிகளால் பார்க்க படுகிறது.

எல்லாவற்றுக்கும் இவர்கள்தான் முன்னிறுத்த படுகிறார்கள்.

சாலை விபத்து ஏதோ காரணத்தால் நடந்து மக்கள் வீதியை மறித்தால் சமாதானம் பேசி கலைய சொல்ல இவர்கள்தான் வேண்டும். பிரச்சனை வழக்கப்படி தடியடியில் முடியும்.

குடிநீர் இன்றி மக்கள் போராடினால் குடிநீர் அதிகாரிகள் மக்கள் முன்னே வர மாட்டார்கள். அவர்களுக்கும் காவல்துறைதான் வந்த சமாதானம் செய்யும்.

சாக்கடை விஷயமா?  போராட்டமா?
ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் இவர்கள்தான் முன்னிலயில் அனுப்ப படுகிறார்கள்.

அரசின் அனைத்து துறைகளின் தோல்வியினால் அல்லது தவறான செயல்பாட்டினால் நிகழும் அனைத்து போராட்டங்களுக்கும் இவர்கள்தான் வந்து சமாதான பேச்சு நடத்துவார்கள். அது எப்படி சாத்தியம்?

வருமுன் காக்கும் பழக்கமே நம் அரசிடம் கிடையாது. மோதலை முன்பே தவிர்ப்போம் என்பது இவர்கள் பழக்கமே இல்லை.

எப்போதும் கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தில் தினமும் ஒவ்வொரு மாவட்டத்தில் ஏதாவது ஒரு பக்கம் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். இதை சமாளிக்க வேண்டியவர்கள் இந்த காவலர்களே.

இந்த ஒரு வேலைக்கே இவர்களுக்கு நேரம் போதாது. இந்த லட்சணத்தில் மற்ற குற்றங்களுக்கு புலனாயவோ, குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவோ இவர்களுக்கு எங்கு நேரம் கிடைக்கிறது?
இதுமட்டுமல்ல. ஊரில் இருக்கும் அனைவருக்கும் “பந்தோபஸ்து” வேறு இவர்கள்தான். செத்தவன், சாக கிடக்கிறவன், ஊரை அடிச்சு உலையில் போட்டவன், அவன் கூத்தியா வீடு என்று அனைவருக்கும் இவர்கள் பந்தோபஸ்து வேறு.!!

இப்போ புதிதாக சாராயகடைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும். என்ன கருமம்டா?

ஆடுத்து கோயில் திருவிழாக்கள் வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு!

இதைத்தாண்டி கோழி திருடினவன் முதல் ஆடி கார் திருடினவரை தேடனும்.

இத்தனை கூத்துக்கு நடுவுல உயர் அதிகாரிகள் வீட்டு குழந்தை கக்கா போவது முதல் பள்ளி கூடம் போவது வரை இவர்களின் பொறுப்பு.
ஒவ்வொரு அதிகாரிகள் வீட்டிலும் குறைந்தது 3 பேர் வேலைக்கு இருப்பார்கள்.

சரி இத்தனை கலாட்டாக்களின் நடுவிலும் வேலை செய்யும் இடத்தில் மரியாதையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

டேய்..அல்லது யோவ் என்றுதான் மேல் அதிகாரி அழைப்பார்கள். அவர்களுக்கு
சிகரெட் முதல் சினிமா டிக்கெட் வரை வாங்கி தர வேண்டும். கூழை கும்பிடு போட வேண்டும். இல்லாவிட்டால் பணி இட மாற்றம்தான். (TRANSFER)..

இவர்களுக்கு மனைவி மக்கள் கிடையாதா? அவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போகாதா?  எல்லோரும் எல்லா இடத்தில் வேலை செய்துவிட முடியாதா? இவர்களின் குழந்தைகள் படிப்பு இடமாற்றத்தால் கெடாதா? இப்படி எதையும் முக்கால்வாசி அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். கேட்டால்...”அதெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது சார் “ என்று பதில் வரும்.

கான்ஸ்டபிளை இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். இன்ஸ்பெக்டரை, ஏ.எஸ்.பி. மிரட்டுவார். ஏ.எஸ்.பி.யை எஸ்.பி மிரட்டுவார்...இப்படி மிரட்டல் ஒரு தொடர்கதையாகவே மேல் நோக்கி செல்லும்.

ஆனால் அதிகாரிகள் இதற்கு நேர் மாறு.  அவர்கள் செல்லும் இடமெல்லாம் இவர்களின் சொகுசு வாழ்க்கையும் தொடரும். ஏர்கண்டிஷன் இல்லாமல் இவர்களின் பணியறை இருக்காது. இது போதும் இவர்களை பற்றி சொல்ல?

இத்தகைய சூழலில் வேலை செய்யும் காவலர் எப்பேர்பட்ட மனஅழுத்தத்தில் ஆல்லது மன நிலையில் இருப்பார்?  இவருக்கு சிந்திக்கவே நேரம் கிடையாது. வன்முறை இவர்கள் வழக்கமாகிறது. அதை இவர்கள் பெரிதும் நம்புகின்றனர். இதை மாற்ற யாரும் முயலுவதே இல்லை.
ஆட்கள்தான் இத்தகைய நிலையில் இருக்கிறார்கள். மற்ற விஷயங்கள் எப்படி என்று பார்த்தால் அது இன்னும் அவலம்.

ஒரு காவல்நிலையத்தின் ஒரு மாத தேவை என்ன என்று யாராவது அதிகாரிகளிடம் கேளுங்கள். ஒருவருக்கும் தெரியாது?

பேனா முதல் குடிதண்ணீர் வரை அந்த காவல்நிலைய செலவுகளை அந்ததந்த காவல்நிலைய அதிகாரிகளே கவனித்து கொள்ள வேண்டும். ஒரு விலக்கு பழுதடைந்தாலும் அதை சரி செய்ய காசு அரசிடம் இருந்து பெற தலைய சுத்தி மூக்க தொடணும். கடைசியில் கிடைக்கவே கிடைக்காது.

அதானால்தான் வழக்கு பதிய வருபவரிடம் முதலில் எழுத்தர் (Writer) சொல்வது.. “ ஏன்னா..மோட்டார் காணுமா...போய் ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு ரெண்டு பேனா வாங்கி வா...வரும் போது வழியில் ரெண்டு டி சொல்லு !”. 

இப்படி தொடங்கினா எப்படி?

தமிழக / இந்திய காவல்துறையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதற்கு ஒரு புத்தகமே போடவேண்டும். அப்படியும் மாளாது.
காரணம் அத்தனை அரத பழசான நிலையில் அடிப்படை காவல்துறை மனிதவள நிலையிலும், மற்ற விஷயத்திலும் இருக்கிறது.

திடிரென்று..சில பளபள கார்களையும் ஜீப்புகளையும் கொடுத்து நவீன படுத்துகிறேன் என்று சில தலைமைகள் பம்மாத்து காட்டும்.

ஆனா பாருங்கள்.  சென்ற நூற்றாண்டு இரண்டாம் உலக போரில் பயன்படுத்திய Lee-Enfiled ரக துப்பாக்கியை இன்னமும் பயன்படுத்தும் ஒரே காவல்துறை உலகிலேயே இந்திய காவல்துறைதான்.

உணமையில் அடிப்படையாக காவல்துறையில் மாற்றங்கள் நகழ்த்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப் பட்டு
ஒரு 3 மாதத்தில் (இல்லாட்டா இழுத்துகிட்டே இருப்பாங்க)  ஒரு வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும். பிரச்சனைகளை களைய உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தமிழகத்தில் இன்றைய கணக்கு படி 700 பொதுமக்களுக்கு ஒரு காவலர் என்கிற விதத்தில்தான் இருக்கின்றனர். இது போதாது.

உடல் அளவில், மனதளவில் பழுதுபட்டு நிற்காத காவலரே இப்போது இல்லை என்று சொல்லும் நிலையில் இருக்கிறோம்.

காவல்துறையை மேம்படுத்தி இப்போது காவலர்களை காக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

காவலர்களே...உங்கள் அதிகாரிகள் உங்களுக்காக பேச மாட்டார்கள்.
பொதுநல ஆர்வலர்களே பேசுவார்கள்.!

காவலரே..இன்று NEETக்கு எதிராக குரல் கொடுத்து போராடும் நம் மக்கள்
உண்மையில் உங்கள் வீட்டில் இருக்கும் அனிதாவுக்கும் சேர்த்தே போராடுகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

கொஞ்சம் கருணை காட்டுங்கள்

மக்கள் இன்னமும் உங்கள் மீது சிறு கருணையும், சிறு, வெகு சிறு மரியாதையும் வைத்துள்ளனர். அதை தக்க வைத்து கொள்ளவாவது
வன்முறையை கட்டவிழ்த்து விடாதீர்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது. 

No comments: