Sunday, September 17, 2017

ஈ.வே. ராமசாமி ஐயா !

-                    
இன்று பெரியாருக்கு பிறந்தநாள்.
மோடிக்கும் இன்று பிறந்தநாள்.
ஒருவர் அரசியலில் இருந்து சமுக மாற்றம் தேடி வெளியே வந்தவர்.
இன்னொருவர் சேவை மையத்தில் இருந்து அரசியலுக்கு இடம் மாறியவர்.
என்னை பொறுத்தவரை இருவரும் ஒரு எதிர்வினையால் உருவானவர்கள்.

மோடி ஒரு அரசியல் கட்சி தலைவர்.
ஆக பிறந்தநாள் வாழ்த்துகளுடன் நிறுத்துகிறேன்.

பெரியார் - இவரை பற்றி பேசலாம்.! பேச வேண்டும்.

இவரது பரிணாமத்தில் ஆதியில் தமிழ் நாட்டில் இவர் வீழ்த்த நினைத்தது இரண்டு. ஒன்று காங்கிரஸ். இன்னொன்று பிரமாணர்களின் ஆதிக்கம். இதற்கு காரணம் இவரது தனிப்பட்ட அனுபவங்களாக இருந்தாலும் எடுத்த நிலைப்பாடு ஒட்டு மொத்த சமுகத்திற்காக என்று மாற்றியது இவரது பாணி.

இவை இரண்டிலும் இவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

இவர் முன் வைத்த கொள்கைளில் பல முரண்பாடுகள் இருந்தாலும் கேள்வி கேளுங்கள் என்ற வகையில் இவர் மீண்டும் நம் பகுத்தறிவை தூசி தட்டினார்.
எதிர்த்து கேட்பது பாவம். தவறு என்று இருந்த நிலையை மாற்றி கேள்விகளை தொடுத்தார். முறை குருரமாக இருந்தாலும் கேள்விகள் அடிநாதம் நியாயமானவையா என்றால் பெரும்பாலும் ஆம் என்றே சொல்லவேண்டும்.

இந்து அல்லது சனாதன தர்மத்தில் ஒரு காலத்தில் மிகவும் போற்றப்பட்ட, பின்பற்றப்பட்ட உண்மையை தேடும் வாத பிரதிவாதங்கள் மறைந்து குருட்டுத்தனமான வழிப்பாடு சடங்குகளில், ஜாதி சண்டைகளில் இறைதேடல் முழுகடிக்கப் படும் வேளையில் இதுபோல் தொடர்ந்து இந்த சமுதாயத்தில் யாராவது ஒருவர் தோன்றி கொண்டே இருப்பார்கள். இருகின்றார்கள்.  அது நாராயண குருவாக இருக்கலாம். ராமானுஜராக இருக்கலாம். பெரியாராக இருக்கலாம். இன்னரும் அறியப்படாதா ஆயிரம் பேர் இருக்கலாம். இன்னமும் வருவார்கள்.

இதில் இவர் பெரிதும் வெற்றி பெற்றாரா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது.  அதற்கும் காரணம் உண்டு. நம் சமுக அமைப்பு முறையும் இதற்கு காரணமாக இருக்கலாம். காலம் காலமாய் இருந்த வந்த பழக்கங்களை ஒரே இரவில் அல்லது ஒரே தலைமுறையில் தூக்கி போட நாம் விரும்புவதில்லை. மாற்றங்களை நம் மனம் எதிர்த்து கொண்டேதான் வரும். அப்பாவின் நினைவாக வீட்டில் தூசி படிந்து நிற்கும் பழைய சைக்கிளை போன்று பல விஷயங்கள் நம்மிடம் தினம் தேங்குகின்றன.

உதாரணமாக இவர் குடுமி, பூணல், வீபூதி, குங்குமம் போன்ற அடையாளங்களை கிண்டல் செய்து அமங்கலம் என்று பெரிதும் கருத்தப்பட்ட கருப்பு சட்டையை முன் வைத்தார். என்ன ஆயிற்று?  இன்று அந்த கருப்பு சட்டை என்பதே சடங்காகி போனது. ஒரு அடையாளமாகி போனது.

சிலைகளை உடைத்து கற்சிலைகளில் கடவுள் இல்லை என்றார். இவருக்கே ஊரெல்லாம் சிலை வைத்து ஊதுபத்தி கொளுத்தி வருஷம் தவறாமல் மாலையிட்டு வணங்கி வருகின்றனர் இவரது சிஷ்ய கோடிகள்.

அடுத்து இவர் மடங்களை அவைகளின் செயல்பாடுகளை சாடினார். ஆனால் இன்று இவரது சீடர் இவரது இயக்கத்தையே ஒரு மடம் போல் ஒரு குடும்பத்தின் சொத்தாக்கி இயக்கத்தின் சொத்துகளை கை கொண்டு  எதிர்ப்பவர்களை வெளியேற்றுகிறார். இயக்கம் முற்றிலும் வியாபாரமயமாகி விட்டது. ஆக கடவுளை கும்பிடவும் காசு வேண்டும். கடவுளை திட்டவும் காசு வேண்டும் என்கிற நிதர்சனம் வெளிவந்து விட்டது. இதில் மடம் என்ன? இயக்கம் என்ன?  கலர்தான் மாறியது. காட்சிகள் ஒன்றே.

இவர் தெருத்தெருவாக சென்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்து கடவுள் நம்பிக்கையை பரிகசித்தாலும் இன்று வரை
இவரது மன்றங்கள் மறைந்து கோவில்களே அதிகமாக வளர்ந்தது.

கடவுளே இல்லை என்றவரின் பிரதான சீடரே ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்று திசைமாறி போனார். அவரது சீடரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

அரசியல் போக்கிரிகளின் புகலிடம் என்று ஒதுங்கியவரின் சீடர்கள்தான் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்து ஆட்சியில் இருந்து சமுக நீதி தேடுகின்றனர்.

இன்று பெரியாரின் கொள்கைகள் கடவுள் மறுப்பிலிருந்து சாதி ஒழிப்பு என்று சுருங்கி விட்டது என்று சொல்ல புகுந்தால் அங்கும் தோல்வியே!

ஒரு ஜாதியை குறி வைத்து தாக்கி அதன் ஆதிக்கத்தை நீக்கிய இவரால் அந்த வெற்றிடத்தை வேறு ஒரு சில ஜாதிகள் பிடித்ததை தடுக்க இயலவில்லை. காரணம் இவர் முன் வைத்த ஒற்றை சாதி வெறுப்பே !  
எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சாதி சங்கங்களின் வீச்சு அரசியல் பொருளாதார நிலைகளில் இருக்கிறது. அடுத்த சாதிக்காரனை என் மகள் மணந்தால் சொந்த பெண்ணானாலும் வெட்டுவேன் என்கிற அளவுக்கு வெறி படித்து அலைகின்றனர்.

ஆக இவர் தொடங்கி ஒரு நூறு ஆண்டுகளிலேயே இத்தனை வழி மாறுதல்களும் மருவதலும் இவரது கொள்கைகளில் நடக்கும் என்றால் சுமார் 5000 வருடங்களாக இருந்து வரும் வாழ்க்கை முறைகளில் எத்தனை எத்தனை வழுவதலும் திசை மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்?  அந்த புரிதலோடு பிரச்சனைகளை அணுக வேண்டாமா?

இதற்கெல்லாம் காரணம் பெரியார் கேள்விகளை கேட்டார். மற்றபடி மாற்று வழி எதுவும் சொல்லவும் இல்லை. ஒருவேளை அவருக்கு தெரிந்திருக்கலாம்.  மாற்று வழிகளை சொன்னாலும் அந்த வழி இன்னொரு மதமாக மாறும் வாய்ப்பு மிக அதிகம் என்று இவர் பயந்திருக்கலாம். அப்படித்தான் ராமானுஜரும் கடவுளாகி போனார். நாராயண குருவுக்கும், சீரடி பாபாவுக்கும் கோவில் கண்டோம் நாம்.

மேலும் நம் அடிமை மனோ நிலை அப்படி பட்டது. அரசியலிலோ, சமூகத்திலோ வெற்றிடத்தை அது எந்நாளும் ஏற்றுக் கொள்ளாது. அந்த பீடத்தில் யாரையாவது ஏற்றி வைத்து பார்த்தே மகிழும்.

பெரியார் கேள்விகள் கேட்டார். ஆனால் அவை அனைவரையும் சென்றடைந்தும் அடிப்படை மாற்றங்கள் நிகழாத காரணம் அந்த கேள்விகள் கேட்ட முறை.  வெறுப்பின் அடிப்படையில் சமுதாயத்தை பிரித்து கேட்கப்பட்ட கேள்விகள் விடைகளை காண விடாது. அந்த கேள்விகளிலிந்து தப்பிக்க வழி தேடி எதிர் கேள்வி கேட்டு வாதங்களை மொன்னையாக்கும். ஆதுதான் இப்போது நடக்கிறது.

வெறும் வெறுப்பையே வளர்க்கும்.  இன்று விஞ்சியிருப்பது வெறுப்பே ! கேள்விகள் மறந்து போயின.

ஆகவே பொங்கலுக்கு பொங்கல் வீட்டை சுத்தம் செய்து ஒட்டடை விலக்கி, வெள்ளையடித்து வைப்பது போல் நம் வாழ்வியலிலும் இது போன்று சிலர் தொடர்ந்து தோன்றுவது நல்லதே..

அடுத்து வரும் பெரியாராவது அனைவரையும் ஒருங்கினைத்து சமுக ஒற்றுமையை வலியுறுத்தி கேள்விகள் எழுப்பட்டும்.

இப்போது கூட நான் பெரியாரை இகழ்வதாக மட்டுமே நினைத்து என் ஜாதியை ஊகித்து திட்டுவீர்கள். அது தவறு. நான் பெரியாரின் கேள்விகளை வரவேற்கிறேன். வழி முறைகளைதான் கேள்வி கேட்கிறேன். அதைத்தான் பெரியார் சொல்லி கொடுத்ததாக நான் நினைக்கின்றேன்.

பெரியார் முடிவல்ல. அவரை கடவுளாக்காதீர்கள். அவர் ஒரு தொடக்கமே!

தீட்டிய மரத்தில்தான் பதம் பார்க்க வேண்டும். குருவை மிஞ்சிய சிஷ்யன் தான் குருவுக்கு பெருமை.

கேள்விகளை பெரியாரிடம் இருந்தே தொடங்கி உண்மைகளை தேடுவோம்.

No comments: